பெண்கள் மட்டும்: யோகப்பயிற்சி முகாம்

குரு சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி முகாம் இன்று மிகுந்த ஏற்பு பெற்றுவிட்ட ஒன்று. முதன்மையாக அது ஓர் உடல் – உள்ளப் பயிற்சி. மதம் சார்ந்தது அல்ல. ஆன்மிகப் பயணத்தில் ஓர் ஊர்தி என அதைக் கொள்ளலாம். அறிவார்ந்த செயல்பாடுகளில் இருக்கும் எவருக்கும் உருவாகும் உடற்சிக்கல்கள், உளச்சலிப்புகள், அவநம்பிக்கைகள் ஆகியவற்றை கடக்கும் வழிகளிலொன்று அது. இன்றைய வாழ்வின் பொருளில்லாத உழல்தல்கள், மூளையுழைப்பு அளிக்கும் அலுப்பு ஆகியவற்றிலிருந்து வெளியேறும் ஒரு வாசல்.

யோகம் எந்நிலையிலும் உகந்ததே. ஆனால் உரிய ஆசிரியர்களால் நேரடியாகப் பயிற்றுவிக்கப்படும் போதே அது முழுமையாகப் பயனுள்ளதாகிறது. அந்த ஆசிரியருடனான நேரடியான தொடர்பு எப்போதும் இருக்கவேண்டும். அந்த ஆசிரியர் அதற்குத் தகுதியானவராக இருக்கவேண்டும். குரு சௌந்தரின் இடம் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று.

இதுவரை நிகழ்ந்த யோகப்பயிற்சிகளில் பெருவாரியாகப் பெண்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் பெண்களுக்கான பயிற்சிகள் சற்று மாறுபட்டவை. அவர்களுக்கே உரிய சில உடற்சிக்கல்கள், உளத் தனித்தன்மைகள் உள்ளன என சௌந்தர் கருதுகிறார். ஆகவே பெண்களுக்காக மட்டும் ஒரு யோக முகாம் நிகழ்த்த எண்ணுகிறார். NAVA Yogini Practices என அழைக்கப்படும் இவை நெடுங்காலமாக இருந்து வருபவை.

வரும் செப்டெம்பர் 30, மற்றும் அக்டோபர் 1,2 (சனி ஞாயிறு திங்கள் — திங்கள் காந்தி ஜெயந்தி. தேசியவிடுமுறை) தேதிகளில் ஈரோடு அந்தியூர் அருகே மலைத்தங்குமிடத்தில் நிகழவிருக்கிறது.  முந்தைய அமர்வுகளில் கலந்துகொண்ட பெண்களும் கலந்துகொள்ளலாம். பெண்களுக்கு மட்டுமே இடம்.

வசதியான, பாதுகாப்பான தங்குமிடம் உண்டு. பெண்கள் தனியாகவும் வரலாம். பயண ஏற்பாடுகள் செய்தபின் தெரிவித்தால் தேவையான உதவிகள் செய்யப்படும். வாட்ஸப் குழுமம் வழியாக பிறருடன் தொடர்புகொண்டு வந்து திரும்ப ஏற்பாடு செய்யப்படும்

தொடர்புகொள்ள :

[email protected]

முந்தைய கட்டுரைநவீன ஓவியக்கலையும் இன்றைய வாழ்க்கையும்…
அடுத்த கட்டுரைபெண்களுக்கான யோகம்