நாலாயிரம் கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

நாலாயிரம் பற்றிய அறிமுகங்கள் உதிரியாக ஒரு வாசகனாக பலமுறை நிகழ்ந்திருந்தாலும் காவிய முகாமில் ஜா. ஜா அளித்த அறிமுகம்  சிறப்பானதாக அமைந்தது. இம்முறை இதை எப்படியும் படித்துவிட வேண்டும் என்று தேசிகன் பதிப்புகள் வாங்கி வந்து படிக்க நேரமானாலும் உள்ளே என்னால் செல்ல முடியவில்லை. ஒரு கட்டத்தில் பெரும் ஆயாசமாகவும், சற்றே என் புரிதல் குறைபாட்டை எண்ணி வெட்கி மனம் புழுங்கி கொண்டிருதேன்

சில மரபான உரைகளின் உள்ளே என்னால் பொருந்தி செல்ல முடியவில்லை இவையும் என வரையில் என புரிதல் குறைபாடு மட்டுமே என்று நான் உணர்ந்தேன்

தளத்தில் அறிவிப்பு வந்த காலை முதலில் பதிவு செய்தேன். சென்ற வகுப்பு வந்து மிகச் சில காலமே ஆனாலும் , அலுவலகத்தில், சொந்த வாழ்விலும் பல அழுத்துங்கள் இருந்தாலும் எப்படியும் வந்து விடுவது என்று தீர்மானமாக முடிவெடுத்து வந்துவிட்டேன். எப்போதும் போல எனக்கு எந்த மறு மெயிலும், வாட்ஸ்அப் குழுவிலும் இல்லாததால், எப்படி யாருடன் செல்வது என்று தெரியாமல் அசட்டு தைரியத்தில் வந்து ஈரோடு இறங்கினேன். ஜா. ஜா தனிப்பட்ட முறையில் தெரிந்து இருந்தும் ஏனோ அவருக்கு கால் செய்யவில்லை. அரிதாக இப்படி நிகழ்வது உண்டு சென்றமுறை தத்துவ வகுப்பு வந்த நிகழ்வை நான் உங்களிடம் பகிர்ந்திருந்தேன். அது போலவே இம்முறையும் நிகழ்வு, எப்போதும் உருட்டும் பேருந்து இம்முறை அந்தியூருக்கு  5.22 வந்து நின்றது ஆச்சரியம். இம்முறை நான்கு பழகி விட்டதால், நல்ல தூக்கத்தை அடைந்தேன். மனம் இயல்பான ஒரு மன நிலைக்கு அடைந்து விட்டிருந்தது. வெள்ளிமலை இனிமேல் தனியான ஒரு இடம் இல்லை என்று மனம் தெளிந்து விட்டதாகவே படுகிறது. வெள்ளி மலையில் இருக்கும் பறவைகள், வான் தொடும் மலைகள், ஓடைகள், தனித்த பாறைகள், யானை குடில்கள், அந்திகள், காலைகள், தனியான தூரத்து மயில் அகவல்கள், புத்தர், வாகதேவி, குளக்கரை பாதை, உயர்ந்த நாவல் மரம் அதன்  வந்தடையும் பறவைகள், கிணற்று இருக்கைகள் அனைத்தும் ஒருவிதமான பரவச மன நிலையை அளிப்பவை.  

வகுப்பு சரியான நேரத்தில் ஆரம்பித்தது. பல புதிய முகங்கள். என் வரையில் பெருமாளின் லீலா விபூதி “அணு பவிக்கவந்தவர்கள் பலர் இருந்தனர். எப்போதும் போல ஜா. ஜா என்ற ஆளுமை நம்பி ஆறுதல் அடைந்தேன்.   வகுப்பில் முக்கியமான அம்சம் என்பது மாலோலன், நவீனமும் மரபும் இணைந்து இரு கைகளாக இயங்க முடியும் என்று  இந்த வகுப்பு தெளிவாக நிரூபித்தது. மலோலன் அவர்களின் பல நெருக்குதல் களுக்கு மத்தியில் இந்த வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதை  பின்னர் அறிந்தேன். ஆனால் வகுப்பில் பலர் அவரை முன்னரே அறிந்திருந்தார்கள். பலர் அவரின் குரலில் பாராயணம் செய்து கொண்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது

பல மணி நேரம் இந்த சந்தங்களை youtube கேட்டு இருந்தாலும், நேரில் கேட்கும் அனுபவம் என்பது தனித்துவமானது. எப்போதும் எந்த இசையும் அது உருவாகும் இடத்தில் இருந்து அனுபவிப்பது என்பது ஒரு நிறை அனுபவம், சென்ற முறை ஆலயக்கலை வகுப்பில் ஜெயக்குமார் பாடியநடந்த கால்கள்இன்னும் என் வரையில் பிரியவில்லை. வெள்ளி மலையின் ஆழ்ந்த புள்அமைதியும், கலையின் ஆழ்ந்த ஒழுங்கும் நம்மை அப்படியே சுழற்றி வேறொரு தளத்தில் தூக்கி போட்டு விடுவதை காணலாம். கள்ளமற்ற மாலோலன் பின்புலம் பற்றி அறிந்தது இன்னும் ஆச்சரியம், பலமுறை நீங்கள் சொன்னதுதான். குறைந்தபட்சம் 1000 ஆண்டுகள் இந்த கூட்டம் வேறு எந்த எதிர்பார்ப்பும் இன்றி இதை செய்து கொண்டிருக்கிறது என்பதை நேரில் கண்டேன். மிகச்சிறிய வயதில் ஆரம்பித்து 13 வயதில் மொத்த நாலாயிரமும் மனப்பாடம் என்பது நம்ப முடியாத ஒன்றாக பட்டது. ஆனால் ஜா. ஜா வகுப்பில் எந்த வார்த்தை சொல்லி கேட்டாலும் உடனடியாக அந்த பாடலை சொன்னது அனைவருக்கும் பெரும் திகைப்பை அளித்தது. முதல் வரி என்றில்லாமல் ஏதோ ஒரு வார்த்தை என்று சொன்னால் போதும். ஒரு பெரும் google search engine ஐ உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதுவாவது சில வினாடிகள் எடுக்கும் ஆனால் அவர் சொன்ன மறு நிமிடம் கூறுகிறார். ஆனால் அப்படி சொல்பவர்கள் வெறும் 90 பேர் மட்டுமே அவர் குழுவில் இப்போது இருப்பதாக கூறியது வருத்தமளித்தது. பலர் ஆர்வமாக அவரின் தொடர்பை தங்கள் தொலைபேசியில் வாங்கி வைத்துக் கொண்டார்கள்

ஜா. ஜா பற்றி நம் குழுவில் அனைவரும் அறிந்தது தான், அந்த மலர்ந்த முகமும், குழப்பமில்லாத உச்சரிப்புகளும், அனைத்து கருத்துகளுக்கும் இடமளிக்கும் அவரின் பாங்கும், கொஞ்சம் அழுத்தி சொன்னாலும் பல குழப்பங்களுக்கு இட்டு செல்லும் இடங்களை தனியாக தவிர்த்து மிக சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தார்ஒரு தொழில் பயிற்றுநராக இருந்தாலும், இயல்பில் இல்லாமல் அவரால் இவற்றை முழுமையாக செய்ய முடியாது

வகுப்பின் தொடக்கம் என்பது மிகசசிறப்பான ஒன்றாக அமைந்தது. ஒரு பக்தி இலக்கியத்தை எப்படி அணுகுவது என்ற புரிதல்கள் பலமுறை நம் குழுவில் தெரிந்திருந்தாலும், பல முதல்முறை நண்பர்களுக்கு இவை சிறந்த திறப்பாக அமைந்தது. ஆனால் இவை நாலாயித்தாய் மட்டும் என்றில்லாம எந்த பக்தி இலக்கியத்தையும் அணுகுவது பற்றி இருந்தது. எப்படி சங்க பாடல்கள் பேசு பொருள்கள் அப்படியே பக்தி இலக்கியம் தன்னுள் இழுத்து கொண்டது மற்றும் நவீன காலத்தில் அவற்றின் எசசங்கள் எப்படி இருக்கின்றன என்று கூறியது பெரும் திறப்பாக அமைந்தது. ஒரு தேர்ந்த வாசகன் என்ற முறையில் ஜா. ஜா இவற்றை மிக அருமையாக தொகுத்தளித்திருந்தார். அந்த ppt முன்னரே வாட்ஸ்ஆப் குழுவில் கொடுத்திருக்கிறார், பலர் படித்து விட்டு வந்ததால் பல கேள்விகள் இல்லாமல் போனது. ஜா. ஜாவின் பரந்து பட்ட அறிவும், நம்ப முடியாத நில அறிமுகங்களும் அவற்றை தொகுத்து ஒரு சீராக கொடுக்கும் பாங்கும் வியப்புக்குறியது

பாடல்களை வெறும் எண்களில் அடைத்து கொடுக்காமல், ஆசசரியர்களின் தொகுப்பிலும் கொடுக்காமல், குழந்தை, குமரன், மாயை, சரணாகதி, நுட்பம் என்று தொகுத்தளிதது பெரும் திறப்பாக அமைந்தது. இப்படி செய்ய குறைந்த பட்சம் அனைத்து பாடல்களையும் பலமுறை கண்களால் கண்டு, மனதில் ஓட்டி ஒரு சித்திரத்தை உருவாக்கி இருக்க வேண்டும். தாங்கள் பலமுறை சொன்னதுதான் என்றாலும் அந்த வார்தை இணைவுகள் உருவாகக்கும் அக மகிழ்வு ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது, “என் சிறு குட்டன்“, “நப்பின்னை கானில் சிரிக்கும்” ,”பின்னும் ஆளும் செய்வன்” ,”ஒன்றும் அலாத மாயையாய்“, “மூவுருவில் இராமனாய்“, “பாதியும் உறங்கிப் போகும்“, “கூனல் பிறை வேண்டி“, “என்னையும் உன்னில் இட்டேன்“, “உளன் எனில் உளன்ஆகிய தலைப்புகளில் ஆழ்வார்களின் பாடல்களை தொகுத்தது பெரும் திறப்பாக அமைந்தது. ஒரு இலக்கிய வாசகனாக இவை எனக்கு பெரும் திறப்பை அளித்தவைமேலும் பல வார்தைகள்பெருவழி நாவல்“, பெருமழை மொக்குகள், கிளர் வழி இளமை, தெரிந்துணர்வு, கீழ்நாங்கள், உழைக்கு(மான்) ஓர் புள்ளி மிகை, தரு துயரம் தடாயேல். இப்படி பல. தமிழ் விக்கி எழுதும்போது  பிரான்சுவா குரோதமிழின் சொற்களை அருங்காட்சியாகத்தில் இருந்து எடுத்து புழக்கதிற்கு கொண்டு வரவேண்டும்என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது

நண்பர்கள் சுட்டியதுபோல வெறும் சொல்லயழகையும், பொருளழகையும் மட்டும் சொல்லாமல், திராவிட வேதம் என்று சொல்லும் சொல்லுக்கு நியாயம் கொடுப்பது போல தத்துவ விளக்கங்களை கொடுத்து கொண்டே வந்தார். மாலையில் வைணவம் பற்றிய வகுப்பு ஒரு பெரும் பருந்து பார்வையாக இருந்தது. அவற்றில் இருந்து இன்னும் பல புரிதல்களுக்கு எளிதில் செல்ல முடிந்தது. ஒரு தேர்ந்த தத்துவ வாசகனக பல நுட்பமான விஷயங்களை விளக்கி சொன்னது இன்னும் சிறப்பு. வகுப்பின் மிக முக்கியமான பகுதியாக இதை நான் நினைக்கிறேன். கடந்த வகுப்புகள் போல அன்றி கிடைக்கும் அனைத்து நேர சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.  

அந்தியூர் மணியுடனான விவாதங்கள் தனித்துவமானவை, பெரும் அறிவு பொக்கிஷமாக இருக்கிறார்.

தேரந்தேடுக்கபபட்ட  பாடல்கள் மூலம் கூட்டாக படித்தல், சந்தத்தில் கேட்டல், சொல்லயழகையும், பொருளையும்  உள்வாங்குதல், தத்துவ நுட்பங்களை ஆராய்தல் என்று மூன்று நாட்களும் மிக செறிவாக சென்றன. பல பண்பாட்டு தகவல்களும் அவை பயன்படுத்தபட்ட விதங்களும் சுட்டிக்காட்டினார். “சிற்றில் சிறு வீடுஎன்ற வரியும் அவை இப்போது எப்படி இருக்கின்றன என்று சொல்வதில் ஆகட்டும், “உறையூரை கண்டதுமில்லை கேட்டதுமில்லைஎன்று நம் பெருமாள் கூறி பழங்களால் அடிவாங்குவதாக ஆகட்டும், பக்தர்கள் நம் பெருமாளிடனான வாழ்வில் தங்களை இணைத்துக்கொள்வதை பற்றி விளக்கியதில் ஆகட்டும் ஜா. ஜா வுக்கு மிகப்பெரும் கடன் பட்டுள்ளோம்.

இந்த வகுப்புகளின் கைப்பொருள் என்பது வாழ்நாளெல்லாம் நம்முடன் பயணம் செய்யப்போகும் ஒரு நண்பனை அறிமுகப்படுத்துவதாகும்

நன்றி 

திருமலை 

முந்தைய கட்டுரைபிரபந்தக் கல்வி, கடிதம்
அடுத்த கட்டுரைஆசிரியர் சௌந்தரின் யோக முகாம், மீண்டும்