அன்பின் ஜெ,
நலம் திகழ விழைகிறேன்
நானும் எனது பத்து வயது மகளும் தூரன் விழா முடித்துவிட்டு வீடு திரும்பும் போது என் மகள் சட்டென “டாடி சின்ன பசங்க ரிஸர்ச் பண்ணாலாமா” என்றாள் . நானும் “கண்டிப்பா பண்ணலாம்” என்றேன். பதிலுக்கு அவள் ” ஓகே அப்போ நான் ரிஸர்ச் பண்றேன்” என்றாள், அவளுக்கே உரிய கள்ளமற்ற கேளிக்கையான சிரிப்புடன். நான் அதிகமான நிதானத்துடன் “என்ன ரிஸர்ச் செய்ய போற” என்றேன். நான் அவள் எதாவது ஓர் மலரை அதுவும் மந்தாரை மலரை சொல்வாள் என்பது என் கணிப்பு. ஏனெனில் ஓரிரு நாட்களுக்கு முன்பு நானும் அவளும் மந்தாரை மலரை பற்றி விவாதித்து இருந்தோம்
அவள் ம்மம்ம் என்று சற்று நேரத்தை இழுத்து “எருக்கன் செடி” என்றாள். என் ஆச்சரியத்தை கட்டுப்படுத்த முடியாமல் நான் உடனடியாக “எருக்கஞ்செடியா ” என்று கேட்டு உடனே “ஏன் எருக்கஞ்செடிய பத்தி ரிஸர்ச் பண்ண போறே ” என்றேன். பதிலுக்கு அவள் ” ஏனா அத பத்திதான் ஏதுமே தெரியாதே” என்று சத்தமாக சிரித்தாள். அப்புறமென்ன பல கேள்விகள் அவளிடமிருந்து “ஏன் நம்ம பாட்டி சதிர் ஆட கோயிலுக்கு போல, நான் சொல்ல வந்தது உதயகுமார் சாருக்கு புரியல (உதயகுமார் அவளிடம் சில கேள்விகளை கேட்டார்).
வீட்டுக்கு வந்து சற்று நேரம் கடந்து “உண்மையாக ரிஸர்ச் பண்ண போறியா ” என்று நான் சற்று உறுதியுடன் கேட்டேன், அவள் “ஆமா டாடி ஆனா நீங்க ஹெல்ப் பண்ணுங்க எனக்கு எப்படின்னு தெரியாது ” என்றாள்.
சரி ” நீ எருக்கஞ்செடிய பத்தி என்ன ரிஸர்ச் பண்ண போறணு போர்டுடல எழுது நான் ஹெல்ப் பண்றேன் ” என்றேன். அவள் போர்டுக்கு சென்று ஓவ்வொன்றாக யோசித்து கீழே உள்ளவற்றை எழுதினாள் (அதையும் இனைத்துள்ளேன்)
1. Butterfly & Insects
2. Structure
3. Uses
4. Belief & History
நான் “உனக்கு எப்படி இந்த ஆர்டர்ல ரிஸர்ச் பண்ணனு தோனிச்சு” என்றேன். அவள் உடனே “மேம் கல்லெழும் விதை புக்ல இப்டி நிறைய எழுதராங்கள டாடி” என்றாள் (பி.கு இன்னும் அவள் சரளமாக தமிழ் வாசிக்க மாட்டள், கல்லெழும் விதை அவளுடைய இரவுக்கான கதையாக நான் வசிப்பேன்).
பறவை பார்த்தல் வகுப்பின் விஜய் மற்றும் ஈஷ்வர் அவர்களும் , தாவரவியல் வகுப்பின் லோகமாதேவி அவர்களும் எங்கள் அன்றாட வாழ்க்கையை (என் வாழ்க்கையும் சேர்த்துதான்) மாற்றி அமைத்தற்காக என் மனமார்ந்த நன்றிகள். என் மகளின் இந்த தொடக்கம் அவர்களிடமிருந்து வந்தது.
அவளுடைய ஆய்வு தொடங்கி விட்டது, தினமும் பள்ளி செல்லும் முன்னும் பள்ளி திரும்பும் போதும் எங்கள் வீட்டு எருக்கன் செடியை பார்த்து செல்வாள், பள்ளி செல்லும் வழியில் எத்தனை எருக்கன் செடியென்று எண்ணி சொல்கிறாள், அகஸ்ட் மாசத்துல எல்லா எருக்கன் செடியும் பூக்குது , என்ன பூச்சிகள் எருக்கன் செடியில் உள்ளதென. கள ஆய்வின் சில தகவல்களையும் உங்களுக்கு பகிர்ந்துள்ளேன்
மூன்று மாதம் ஆய்வு என்று முடிவு, எங்கு சென்று முடியுமென தெரியவில்லை , வெற்றிகரமாக முடித்தால் மிக்க மகிழ்ச்சி , முடிக்க முடிக்கவில்லையெனிலும் மகிழ்ச்சியே. ஏதோ ஓர் ஆய்வை நோக்கி செல்லும் அவளுக்கு உங்கள் ஆசியும் இருக்க விரும்புகிறேன்.
என்றும் அன்புடன்
விஜி
அன்புள்ள விஜி வடிவேல்,
அன்புள்ள விஜி வடிவேல், எங்கள் வகுப்புகள் வழியாக நாங்கள் எதையாவது குழந்தைகளுக்கு அளிக்க விரும்புகிறோம் என்றால் இதுதான். அறிவியக்கம் என ஒன்று உள்ளது என்னும் செய்தி. அறிவுசார்ந்தவற்றில் ஈடுபடுவதில்தான் மெய்யான பேரின்பம் உள்ளது என்னும் அறிதல். அறிதலின் சுவையை அறிந்த குழந்தை ஒருபோதும் எளிய பொழுதுபோக்குகளை இன்பம் என கருதாது. அதை குழந்தைகளுக்கு அளிக்கவே பறவை பார்த்தல் முதல் பல்வேறுவகையான வகுப்புகளை நடத்தி வருகிறோம்.
உங்கள் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஜெயமோகன்











