அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
தத்துவம் மூன்றாவது நிலை வகுப்பில் கலந்து கொண்ட பின், ஈஸா வாஸ்ய உபநிஷத்– ஓர் அனுபவம் (குரு நித்ய சைதன்ய யதி, தமிழில்– எம். கோபால கிருஷ்ணன்) புத்தகத்தை பெற்று வீடு வந்தேன்.
புத்தகத்தில் உள்ள
ஈஸாவாஸ்ய மித(ம்) ஸர்வம்
யத் கிஞ்ச ஜகத்யாஞ் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா
மா க்ருத கஸ்யஸ்வித் தனம்
பாடலின் பொருளாக புத்தகத்தில் உள்ளது:
ஈஸாவாஸ்ய மித(ம்) ஸர்வம்– ஈஸ்வரன் அனைத்தையும் உள்ளடக்கியவன்.
யத் கின்கா ஜகத்யம் ஜகத்– பரமார்த்திக ரிஷியின் பார்வையில் எதுவுமே முக்கியமற்றதாக இருப்பதில்லை. எதுவுமே நிராகரிக்கப்படுவதில்லை. பொருட்களின் பேரமைப்பில் துளி மணலுக்கும் அதற்கான இடமுண்டு.அனைத்துமே வணக்கத்திற்குரியவை. அப்போது தான் அனைத்தையும் நிர்வகிக்கக்கூடிய பேருண்மையின் புனித இருப்பை நாம் உணரமுடியும். இதுவே தன்னை உணர்தலின் பாதையில் முதல் படி. ரிஷி நமது கவனத்தை ஒவ்வொரு துளியிலும் உள்ள புனிதத்தை நோக்கி ஈர்கிறார்.
தேனா த்யக்தேனா– கர்வத்தை புறந்தள்ளுக.
புன்ஜீதா– உலகை அனுபவி.
மா க்ராதா– பறிக்காதே.
எனக்கு பெரும்பாலான காலை பொழுதுகள், சூரிய உதயத்தை பார்ப்பதில் விடிகின்றன. மேலே உள்ள மந்திரத்தையும் அதன் பொருளையும், மூன்று நாட்களாக வாசித்து வந்தேன். ஒவ்வொரு வார்த்தைக்கான பொருளையும் மெதுவாகவே உள்வாங்க முடிந்தது. மகளுடன் காலை விளையாட்டு மைதானம் செல்வதால், அமர்ந்து மண்ணையும், செடி, மரத்தையும், உதயமாகிய இளஞ்சூரியனையும் உணர்ந்த வண்ணம் வாசிக்கப் பெற்றேன்.
இன்று காலை, ‘மா க்ருத (மா க்ராதா)- பறிக்காதே’ எனும் பொருள் மனதை புரட்டிப்போட்டு விட்டது. இவ்வளவு நாளாக படித்தும் உணராத ஒன்று, மெல்ல மெல்ல விரிய ஆரம்பித்தது. கவராதே, கொள்ளாதே, எடுக்காதே என்ற சொற்கள் இல்லாமல், குரு ‘பறிக்காதே’ என்ற பொருளை கூறுகிறார்.
நாம் பறிப்பது மென்மையான பூவை. விரல்களை கொண்டே எளிமையாக செய்யக்கூடியது. நுண்மையான செயல் அது. அதனாலேயே அந்த செயலில் மறைந்துள்ள ‘நான்’ என்பதை அறியாமல் போய்விடுகிறோம். தருக்கி இருக்கும் ‘நான்’ அச்செயலில் இல்லை. ஆனாலும் பறிக்க எண்ணுவதே ‘நான்’ தான். பறிக்க முடியாத போது, அதை உணரும் ‘நான்’ மனதில் தருக்கி எழுகிறதோ? கோபம், கவலை என்று தன் பார்வையை மூடிக்கொள்கிறதோ?
காஷ்ய ஸ்விஸ்தானம்– இந்த உலகம் யாருடையது? நமதல்லாது வேறு யாருடையது?
இதில் உள்ள ‘நமதல்லாது’ மனதை கரைத்து விட்டது. புத்தகத்தை மூடி அமர்ந்திருந்தேன், என்னை சுற்றியுள்ளவையை மெதுவாக நோக்கிய வண்ணம். அட்டைப்படத்தில் உள்ள குரு நித்யாவின் புன்னகைக்கும் கண்கள் என் கண்களை சந்தித்தன.
வகுப்பில் நீங்கள் கூறிய இந்த உபநிஷத பாடலை நினைவு கொள்கிறேன்.
மனதில் வார்த்தை ஒடுங்குக.
மனம் ஞானத்தில் ஒடுங்குக.
ஞானம் ஆத்மாவில் ஒடுங்குக.
ஆத்மா பிரம்மத்தில் அமைக.
ஓம்!ஓம்!ஓம்!
நன்றியுடன்
ப்ரீத்தி.









