
யாரும் வரையலாம்! -அடிப்படை ஓவியப் பயிற்சி வகுப்புகள்
நவீன ஓவியக் கலை என்பது, ஏதோ ஒரு கலைஞர் வரைய, பிறர் பார்த்து ரசிக்கும் ஒன்று மட்டும் அல்ல. ஓவியக் கலையின் உச்ச சிகரங்கள், வாழ்நாள் தவம் செய்த கலைஞர்களால் அடையப்பட வேண்டியவை. ஆனால், ஓவியம் என்பது, அனேகமாக ஒவ்வொருவரும் தங்களின் உள்ளார்ந்த உணர்வுகளுக்கு வடிகாலாகவும், இயற்கையோடு இணைந்து வாழ்வதற்காகவும், ஒரு வகையில் மனஅழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான வழியாகவும், கடைப்பிடிக்க வேண்டிய ஓர் அன்றாடச் செயல்பாடாகவே இன்று உலகமெங்கும் கருதப்படுகிறது.
மேலைநாடுகளில், இயற்கைக் காட்சியைக் கூர்ந்து பார்ப்பதற்காகவே, அதை ஓவியமாகப் பல மணி நேரம் எடுத்துக்கொண்டு வரைவோர் உண்டு. அது அவர்களுக்கு இயற்கையோடு இணையும் பேரனுபவத்தையும், அன்றாட வாழ்க்கையின் பல்வேறு வகையான மன அழுத்தங்களிலிருந்து விடுதலை பெறும் வழியையும் அளிக்கிறது. அத்தகைய ஓவியப் பயிற்சி மாணவர்கள், குடும்பத் தலைவிகள், பணிபுரிபவர்கள் என அனைவருக்கும் அவசியமான ஒன்று. கூடுதலாக, பல்வேறு அறிவியல் துறைகளைக் கற்றுக்கொள்பவர்களுக்கு அடிப்படை ஓவியப் பயிற்சி மிகவும் முக்கியமானது.
பழைய பிரிட்டிஷ் கல்வியில், ஓவியப் பயிற்சி என்பது ஓர் அடிப்படைத் தகுதியாக இருந்தது. அன்றைய இராணுவ அதிகாரிகள் கூட ஒரு காட்சியைத் துல்லியமாக வரைந்திருப்பதைப் பார்க்க முடியும். ஓவியம் வரைவது அவர்களின் அலுவலின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றைய மேலைநாட்டுக் கல்வியும், ஏதோ ஒரு வகையில் ஓவியத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறது.
தமிழகத்தின் கல்வியில் ஓவியம் ஒரு பகுதியாக இல்லை. அதுவும், நமது கற்றல் திறனை அது மிகவும் குறைத்திருக்கிறது என்பதும் உண்மை. ஒரு காட்சியைப் புகைப்படம் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஆனால், அது செல்பேசியில் தான் இருக்குமேயொழிய, மூளைக்குள் இருக்காது. ஒரு நுணுக்கமான காட்சியை, அல்லது ஒரு பொருளை, அல்லது ஒரு கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைப்பதற்கு, நாமே அதைக் கையால் வரைவதுதான் சிறந்த வழியாகும்.
அண்மையில், ரோம் சென்றிருந்தபோது, கணிசமான மேலைநாட்டினர் அவர்கள் பார்ப்பதை உடனடியாக எளிய கோட்டோவியங்களாக வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அது அவர்களின் நினைவில் அந்தக் காட்சியை வாழ்நாள் முழுவதற்கும் பதிய வைத்துக்கொள்ளும் முயற்சிதான்.
அத்தகைய ஓவியப் பயிற்சியை இந்தியாவில் அளிக்க முடியுமா என்று கேட்டபோது, ஓவியக் கலை நிபுணர் லலிதா ராகவன் அதற்கு ஒப்புக்கொண்டார். மூன்று நாட்களிலேயே, ஓவியம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவருக்கு, அடிப்படையில் காட்சிகளை வரைவதற்கான பயிற்சியை அளிக்க முடியும். அதன்பிறகு அவர் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்துக்கொள்ள முடியும்.
பழைய பாணி ஓவியப் பயிற்சியால் இதை அளிக்க முடியாது. இது ஒரு நவீனப் பயிற்சி. முன்பு நடைபெற்ற இந்த ஓவியப் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருமே, தங்களால் கண்களால் பார்த்தவற்றை வரைய முடிவதை எண்ணிப் பெரும் மகிழ்ச்சி அடைந்ததைப் பார்த்தேன். மேலும், காட்டிய காணொளியில் உள்ள ஓவியங்கள், அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக வரைந்த ஓவியங்களாகும்.
மீண்டும் இந்தப் பயிற்சிகள் நடைபெறவுள்ளன. விடுமுறை நாட்களை ஒட்டி நிகழ்வதால், மாணவர்களும் இதில் கலந்துகொள்ள முடியும். அனைவரையும் அழைக்கிறோம்.
(19 ஆம் தேதியும் 20 ஆம் தேதியும் பூஜை விடுமுறை. அதையொட்டி இந்த வகுப்பு சனி ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் ஒருங்கிணைக்கப்படுகிறது)
அக்டோபர் 17 (சனி) ,18(ஞாயிறு) 19 திங்கள்
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட வகுப்புகள் – இடமிருப்பவை

யோக வகுப்புகள்
குருஜி சௌந்தர் சத்தியானந்த யோக மரபைச் சார்ந்தவர். முறையான யோகப் பயிற்சிகளை வழங்கும் உலகப் புகழ்பெற்ற அமைப்பில், ‘முதுநிலை குரு’ எனும் பட்டம் பெற்றவர் சௌந்தர்.
இந்த அமைப்பின் சார்பில் வழங்கப்படும் யோகப் பயிற்சி என்பது வெறுமே யோகாசனங்களைச் செய்வது அல்ல. நூறாண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட யோகப் பயிற்சி என்பது, உள்ளத்தைக் குவித்தல் மற்றும் அதற்கேற்ப உடலைப் பயிற்சி அடையச் செய்தல் ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தது. இன்று, அதற்கு இணையாகவே உள்ளத்தை அமைதிப்படுத்துதல், உடலின் தசைகளைச் சீரமைத்தல், அதன் பிறகு உள்ளத்தைக் குவித்தல், உடலைப் பயிற்றுவித்தல் ஆகிய அம்சங்களையும் கொண்டதாக யோகப் பயிற்சிகள் அமைகின்றன.
இந்த மாற்றத்துடன் கற்பிக்கப்படும் சௌந்தரின் யோகப் பயிற்சி மிகப்பெரிய பயனை அளிப்பதாக ஏராளமான நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். ஏறத்தாழ ஆயிரம் பேர் இந்தப் பயிற்சிகளின் மூலம் பயன்பெற்றிருக்கிறார்கள்.
இந்தப் பயிற்சிகள் முறையான ஆசிரியர் கண்காணிப்புடன் நடைபெறுகின்றன. தொடர்ந்து பயிற்சி செய்பவர்கள் ஆசிரியருடன் தொடர்ச்சியான தொடர்பிலும் இருக்க முடியும். முறையான ஆசிரியரின் கண்காணிப்புடன் தொடர்ந்து செய்யப்படும் பயிற்சிகள், தனியாகச் செய்யப்படும் பயிற்சிகளைவிடப் பெரிய அளவிலான நம்பகத்தன்மையை அளிப்பவை.
யோகப் பயிற்சிகளின் மூலம் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களை வெல்ல முடியும். உளப் பதற்றம் மற்றும் சலிப்பு ஆகியவற்றைக் கடந்து செல்லவும் முடியும். இன்று பலருக்கு இருக்கும் சோரியாசிஸ் போன்ற தோல் நோய்கள்கூட, கடுமையான மன அழுத்தத்தின் விளைவாக உருவாகலாம். அவற்றுக்கெல்லாம் தீர்வாக உலகெங்கும் யோகப் பயிற்சிகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
சொல்லப்போனால், உலகிலேயே சதவீத அளவில் மிகவும் குறைவானவர்கள் யோகப் பயிற்சிகளைச் செய்யும் நாடு இந்தியாதான் என்று சொல்லப்படுவதுண்டு. இந்தப் பயிற்சிகள், நவீன வாழ்க்கையின் சிக்கல்களைச் சமாளிப்பதற்கும், அவற்றை வென்று செல்வதற்கும் மிகவும் அவசியமானவை.
அக்டோபர் 9 10 மற்றும் 11
தொடர்புக்கு [email protected]
வரவிருக்கும் வகுப்புகள்
கிறிஸ்தவ சிந்தனை மரபை மெய்யியல் நோக்கில் அறிமுகம் செய்யும் பொருட்டு சிறில் தொடர்ந்து வகுப்புகளை நடத்தி வருகிறார். மீண்டும் நடைபெறவுள்ள வகுப்புகளில் கிரேக்க சிந்தனை மரபையும் இணைத்துக்கொண்டு, இந்த வகுப்பைச் சற்று விரிவாக நிகழ்த்த உள்ளார்.
மேலைச் சிந்தனையையும் மேலைக் கலையையும் கிறிஸ்தவ மரபை அறியாமல் ஒருபோதும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. மேலைச் சிந்தனையையும் மேலைக் கலையையும் புரிந்துகொள்ளாத ஒருவரால் இன்றைய நவீன இலக்கியத்தையும் நவீனக் கலையையும் புரிந்துகொள்வது மிகவும் கடினம். சொல்லப்போனால், ஒரு மேல்நாட்டினருடன் உரையாடுவதுகூட சில சமயங்களில் கடினமாக இருக்கலாம்.
இன்று ஒருவர் திரைப்படங்களைத் தீவிரமாகப் பார்ப்பவராக இருந்தாலும்கூட, அவற்றின் பின்னணியில் உள்ள பண்பாட்டு அடுக்குகளைப் புரிந்துகொள்ள இந்த அறிமுகம் மிக அவசியமானது. நமது கல்விமுறையிலும் நமது சூழலிலும் இந்த வகையான கல்வி நமக்குக் கிடைப்பதில்லை. இந்தக் கல்வி மிக அவசியமான ஒன்று என்பதனால்தான் இந்த வகுப்பைத் தொடர்ந்து நாங்கள் நடத்தி வருகிறோம்.
இது மதக் கல்வியோ மதப் பிரசாரமோ அல்ல. மாறாக, கிறிஸ்தவ மரபை ஒரு விரிவான வரலாற்று, பண்பாட்டு, மெய்யியல் நோக்கில் அறிமுகப்படுத்தும் முயற்சி.
உண்மையில், கிறிஸ்தவர்களாகப் பிறந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்திற்குச் செல்பவர்களுக்குக்கூட கிறிஸ்தவ மரபு குறித்த மிக அடிப்படையான அறிமுகம்கூட இல்லாமல் இருப்பதை காணலாம். விரிவான அறிமுகம் இன்று எங்கள் வகுப்புகளின் மூலமாகவே அளிக்கப்படுகிறது.
ஆர்வமுடையவர்கள் கலந்து கொள்ளலாம்.
நாட்கள் அக்டோபர் 23 24 மற்றும் 25
தொடர்புக்கு [email protected]

ஆலயக்கலை அறிமுக வகுப்புகள்
ஜெயகுமார் நடத்தும் ஆலயக் கலை வகுப்புகள் மீண்டும் நிகழவிருக்கின்றன. இவை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதுவரை ஏறத்தாழ ஆயிரம் பேர் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல சிறு குழுக்களாக மாறி, ஜெயகுமாருடன் இணைந்தும், தனியாகவும் ஆலயங்களைப் பார்க்கும் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வகுப்புகள் ஒரு தொடக்கப் புள்ளி. வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு கலைப் பயணத்தின், ஆன்மிகப் பயணத்தின் முதலடி.
ஆலயங்கள் நமது மரபின் பெரும் செல்வங்கள். அவை ஒவ்வொன்றையும் ஒரு நூல் என்று சொல்லலாம். ஆனால், நமக்குப் படிக்கத் தெரியவில்லை என்றால் அவை வெறும் பொருட்களாகவே தோன்றும். ஆலயங்களின் கட்டமைப்பு, அவற்றின் சிற்பங்களின் கலைமரபு ஆகியவற்றை அறிந்துகொள்வதன் மூலம் திடீரென்று ஆலயங்கள் நம்மிடம் பேசத் தொடங்குகின்றன. ஒவ்வொரு முறை செல்லும்போதும் புதுப்புது நுணுக்கங்களை நமக்குக் காட்ட ஆரம்பிக்கின்றன.
அவை நம் வாழ்வின் பெரும் கலை அனுபவங்களாகவும், தத்துவ அறிவுதல்களாகவும், மெய்நிலை எய்துதல்களாகவும் உருமாறுகின்றன.
நாட்கள் அக்டோபர் 30 31 மற்றும் நவம்பர் 1
தொடர்புக்கு [email protected]
*
(நவம்பர் 8 தீபாவளி. அந்த வார இறுதியில் வகுப்புகள் இல்லை)
*

தமிழும் சைவமும் அறிமுக வகுப்புகள்
தமிழ் மரபிலக்கியத்தை ஓரளவேனும் வாசித்து, ரசித்து, அறிந்துகொள்ளாத ஒருவரால் தமிழ்ப்பண்பாடு, சைவம், வைணவம் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைப் புரிதலைக்கூட அடைய முடியாது என்பதே உண்மை.
ஆர்வமுடையவர்கள் இத்தகைய நூல்களை வாங்கி வைத்துக்கொள்வதுண்டு. ஆனால் அவற்றைப் படிக்க முடிவதில்லை. ஏனெனில் அவை நம்முடைய இன்றைய வாசிப்பு முறைக்காக எழுதப்பட்டவை அல்ல. இன்றைய வாசிப்பு என்பது அகவாசிபு அல்லது தனிமனித வாசிப்பு. ஐரோப்பியக் கல்விமுறையின் அறிமுகத்திற்குப் பின்னரே இந்த நவீன வாசிப்பு முறை நம்மிடையே பரவியது. மரபிலக்கியங்கள் வேறொரு வகையான வாசிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டவை.
அந்த வாசிப்பு முறையை அறிந்துகொள்ளாமல் அவற்றைக் கற்றுக்கொள்வது கடினம். அவற்றை அந்தத் தளத்தில் கற்று, அவற்றின் நுட்பங்களைப் புரிந்துகொள்ள, முறையாகப் பயிற்றுவிக்கும் தகுதி கொண்ட ஒருவரின் வழிகாட்டுதல் தேவை.
மரபின் மைந்தன் முத்தையா, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மரபிலக்கியத்தை முறையாகக் கற்றவர். சைவ ஆதீன வித்வான் என்ற மதிப்பையும் பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தை ரசிக்கவும், அதன் நுட்பங்களை உணர்ந்து உள்வாங்கவும் அவர் தொடர்ந்து பயிற்றுவித்து வருகிறார்.
எங்கள் அமைப்பு சார்பில் அவர் நடத்தும் ஐந்தாவது நிகழ்வு இது. இதில் தமிழ் மரபிலக்கியத்தை வாசிப்பதற்கும் ரசிப்பதற்குமான பயிற்சியுடன், சைவத் திருமுறைகள் பற்றிய ஓர் அறிமுகமும் வழங்கப்படும். இது இலக்கண வகுப்பு அல்ல, கவிதைகளை ரசிப்பதற்கான பயிற்சி மட்டுமே.
நாட்கள் நவம்பர் 13, 14 மற்றும் 15
தொடர்புக்கு [email protected]











