விலக்குவது என்னும் அடிப்படை

அன்புள்ள ஜெ,

நான் இரண்டு செய்திகளை கேள்விப்பட்டேன். இரண்டு வெவ்வேறு நண்பர்கள் என்னிடம் சொன்னது இது. ஒன்று, ஒரு நிகழ்வுக்கு வரமுடியாத ஒருவர் கட்டிய பணத்தை திரும்பக்கேட்டார். பணம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் அவர் மேற்கொண்டு முழுமையறிவு நிகழ்வுகளுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டார். இன்னொரு நண்பர் நிகழ்வில் தனக்கு உணவுசார்ந்த ஒரு தனிவசதி தேவை என்றார். அவருக்கும் நீங்கள் கலந்துகொள்ளக்கூடாது என்று செய்தி வந்தது, அவருடைய மின்னஞ்சல் தடைசெய்யப்பட்டது. இந்த கடுமை தேவையா? இந்த வகையான அமைப்பு அனைவரையும் அணைத்துக்கொண்டு செல்வதுதானே சரியானது?

அன்பு செல்வக்குமார்

அன்புள்ள அன்பு,

நம் சூழலில் இரண்டு வகையான தொடர்புகளே நமக்கு உள்ளன. அரசியல், வணிகம். இரண்டிலுமே ‘பொதுமக்கள்’ முக்கியமானவர்கள். அரசியலில் அவர்கள் தொண்டர்கள் அல்லது வாக்காளர்கள். வணிகத்தில் நுகர்வோர். இரண்டிலுமே அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள். ஆகவெ இரண்டிலுமே அவர்கள் கொஞ்சிக்குலாவப்படுகிறார்கள், தாஜா செய்யப்படுகிறார்கள். இதை அவர்கள் மென்மை, நாகரீகம், Politeness என்றெல்லாம் எண்ணிக்கொள்ளச் செய்யப்படுகிறார்கள்.

இதன் விளைவாக நம் மக்கள் எந்தவகையான ஆக்கபூர்வமான செயல்பாடுகளுடனும் இணையமுடியாத பொறுப்பின்மையைப் பழகிவிட்டிருக்கிறார்கள். தங்களுடைய சொந்த வசதியை மட்டுமே எங்கும் நினைக்கிறார்கள். அதனால் பிறருக்கு வரும் அசௌகரியங்களை எண்ணுவதே இல்லை. அது இயல்பானது என்றே நினைக்கிறார்கள்.

உதாரணமாக, ஒருவர் ஒரு நிகழ்வுக்கு வருவதாகச் சொல்கிறார். ஆனால் கடைசிநேரத்தில் ஏதாவது அசட்டுக்காரணம் சொல்லி வருவதில்லை. நூறுபேரை எதிர்பார்த்து ஏற்பாடுகள் செய்யப்படும், ஐந்துபேர் வருவார்கள். ஏற்பாட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைவார்கள். இலக்கியம் சார்ந்த பல நிகழ்வுகள் இந்த பொறுப்பின்மையால் அழிக்கப்பட்டுள்ளன. ஆகவேதான் பணம் கட்டும்வரை எவரையும் நாங்கள் பங்கேற்பாளர் என நினைப்பதில்லை. பணம் கட்டியபின் அதேபோல ஏதாவது காரணம் சொல்லி திருப்பிக் கேட்பவரும் அதே அழிவைத்தான் உருவாக்குகிறார். அவருக்காக வங்கிக்கட்டணத்தை வேறு நாம் இழக்கவேண்டும்.

அந்தவகையான பொறுப்பின்மை கொண்டவர் இத்தகைய பொதுவான இலட்சியவாதச் செயல்பாடுகளுக்கு உகந்தவர் அல்ல. இது வணிகமோ அரசியலோ அல்ல, கல்வி என்று அவர் புரிந்துகொள்ளவில்லை. இதிலுள்ளது ஒரு சேவை, இந்த அமைப்பு அவருக்கு அளிப்பது ஒரு கொடை என அவர் உணரவில்லை. இது ஒரு நுகர்பொருள், தான் அதை வாங்குவதாக எண்ணுகிறார். இந்த அமைப்பு நீடிக்கவேண்டும் என்னும் அக்கறை அவரிடம் இல்லை. அவரைப்போன்றவர்கள் வருவது தேவையற்றது என்பதுடன் அது பிறருக்குத் தீங்கானதும்கூட என்பதே உண்மை.

பணத்தை திரும்ப அளிப்பதை சாதாரணமாகச் செய்யும் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக அந்த இழப்பை விலையில் ஏற்றிவிட்டிருக்கும். விளம்பரச்செலவு உட்பட எல்லாமே விலையில் இருக்கும். நுகர்பொருளை அப்படி விற்கலாம். கல்வியை அப்படி விற்கமுடியாது. இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்களில் பொருளியல் வசதியற்றோர், மாணவர்கள் இலவசமாகவே கலந்துகொள்கின்றனர். ஆகவே இவை ஓரளவு பொருள் இழப்புடன் நடத்தப்படும் நிகழ்வுகள்தான். கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டும் பங்கேற்பாளர்கள் உண்டு, அவர்களே எங்களுக்கு உண்மையான மாணவர்கள்.

இதேதான் தனிவசதிகளுக்கும். தனிவசதிகள் செய்யலாம். ஆனால் இரு மடங்குக் கட்டணம் வைக்கப்படவேண்டும். ஆனால் இங்கே கல்வியை, அதுவும் பண்பாட்டுக்கல்வியை அப்படி வணிகம்போல செய்யமுடியாது, கூடாது. ஆகவே குறைந்தபட்ச வசதியே இங்கே அளிக்கப்படும். பிறருடன் கலந்து எளிமையாக வாழமுடிபவர்கள் வந்தால்போதும். இன்றல்ல, மூவாயிரம் ஆண்டுகளாகவே கல்வி என்பது அப்படி எளிய வாழ்க்கையுடன் இணைந்தே உள்ளது. உண்மையில் குருகுல கல்வி என்றால் அதில் மிக அடிப்படையான வாழ்க்கைவசதிகளே இருக்கவேண்டும். கூடுதலாக உடலுழைப்பை கோரும் கல்விநிறுவனங்களும் உண்டு. நாங்கள் அந்த எல்லை வரைச் செல்வதில்லை. கல்விக்காக வசதியை இழக்கமுடியாது என்பவர் கற்கும் தகுதி கொண்டவர் அல்ல.

நான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பை 2010 முதல் நடத்தி வருகிறேன். பதினைந்தாண்டுகளாக. உலகம் முழுக்க அது பரவி வருகிறது. தமிழில் எந்த இலக்கிய இயக்கமும் இந்த அளவு நீண்டகாலம் நீடித்ததில்லை. பரவியதுமில்லை. தொடக்கம் முதலே எங்கள் வழிமுறை ஒன்றே, பொருத்தமில்லாதவர்களை உடனடியாக நீக்கியாகவேண்டும். அதில் சமரசமே கூடாது. இதில் ஓர் இலட்சியவாதம் உள்ளது, அந்த இலட்சியவாதத்தை நம்புபவர்கள் மட்டும் போதும் எங்களுக்கு. அமைப்பை விரிவாக்கவேண்டும் என சம்பந்தமற்றவர்களை உள்ளே அனுமதித்தால் காலப்போக்கில் அமைப்பின் அடித்தளமே கலைந்துவிடும்.

தமிழ்ச்சூழலில் ஓங்கியிருக்கும் சாதியவாதம், மதவெறுப்பு, ஆசாரவாதம்  மற்றும் அரசியல்காழ்ப்புகள் ஆகியவற்றை நாங்கள் அனுமதிப்பதில்லை- சிறிதளவுகூட.அவற்றைவிட மோசமானது அறிவுச்செயல்பாட்டுக்கு எதிரான உலகியல்வாதப் பார்வை. அதாவது எதையும் வணிகமாக, நுகர்வாக நினைக்கும் போக்கு. அதற்கு இங்கே இடமே இல்லை. எவரைச் சேர்ப்பது என்பதைவிட எவரை விலக்குவது என்பதே வணிகம் அல்லது அரசியல் தவிர்த்த எந்த அமைப்புக்கும் அடிப்படை நெறியாக இருக்கமுடியும். இது எந்தத் துறையானாலும் நிர்வாகவியலில் ஓர் அடிப்படை.

ஜெ

முந்தைய கட்டுரைதீமை, ஒரு கடிதம்