எவர் தேவை?

 

விஷ்ணுபுரத்தின் இலக்கிய வட்டத்தின் மீது பெருமதிப்பு கொண்டிருக்கிறேன். இதை ஒரு வணிக வகுப்பாக எண்ணவில்லை. தவிர்க்க முடியாத சூழல் என்பதைத் தாங்கள் அறிந்து கொள்வீர்கள் என எண்ணினேன். உங்கள் அசௌகரியங்களுக்கு தற்போதும் வருந்துகிறேன். நடைமுறை சிகக்ல்கள் எல்லோருக்கும் ஏற்படும். இது நான் வகுப்பை உதாசீனப்படுத்தியதாக ஆகாது என்று உறுதியாக நம்புகிறேன். இத்துடன் என் upi idயை இணைத்துள்ளேன்.‌ Refund பெறாமல் அதனை எதிர்காலத்தில் நடக்கும் வகுப்புகளுக்குப் பயன்படுத்துவது என்றாலும் மகிழ்வேன். நன்றி

ஹெச்.

அன்புள்ள நண்பருக்கு,

உங்கள் பணம் திரும்ப வந்திருக்கும்.

நாங்கள் இந்த அமைப்பை தீவிரமான சிறு குழுவுக்காகவே நடத்த விரும்புகிறோம். இதன் தீவிரம் தளர அனுமதிக்கக்கூடாது என எண்ணுகிறோம். ஆகவே நம் சூழலில் உள்ள பொதுவான அக்கறையின்மை, சோம்பல், மேலோட்டமான ஆர்வம் ஆகியவற்றைக் கொண்டவர்களை தவிர்க்க முயல்கிறோம். அத்தகையவர்கள் கல்வியை விட அசௌகரியங்களை முதன்மையாகக் கருதுவார்கள். குறைகளை மட்டுமே சொல்வார்கள். சிறிய ஒரு காரணத்துக்காகவரே பதிவுசெய்த நிகழ்வை தவிர்ப்பார்கள். ஒரு சினிமா ரிலீஸ் ஆகிறது என்பதற்காகவே நிகழ்ச்சிகளை தவிர்த்தவர்கள் உண்டு. ஆகவே கொஞ்சம் கறாராகவே இருக்கிறோம்.

இந்நிகழ்வுகள் லாப நோக்கம் கொண்டவை அல்ல. மிகச்சில நிகழ்வுகளுக்கே போதிய அளவு பங்கேற்பாளர்கள் உள்ளனர். பல நிகழ்வுகள் குறைவான பங்களிப்புடன் நிகழ்கின்றன. அவற்றை நடத்தும் ஆசிரியர்களின் பெருந்தன்மையும் கருணையுமே அவர்கள் இந்த சில நபர்களுக்காக  இத்தனை தூரம் வந்து நிகழ்வை நடத்தக் காரணம். அவர்களுக்கு நான் பெரிதும் கடன்பட்டிருக்கிறேன். கற்பவர்கள் அந்த ஆசிரியர்களின் கருணையை உண்மையில் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியாது. ஏனென்றால் பெரும்பாலானவர்கள் இதை தங்கள் வசதி சார்ந்து மட்டுமே பார்க்கிறார்கள். தாங்கள் கற்க வருவதே தாங்கள் செய்யும் ஒரு பெரிய உதவி என எண்ணுகிறார்கள். ஆனால் நான் அவர்களுக்கு மீளமீள நன்றியை, வணக்கத்தை தெரிவித்துக்கொண்டே இருக்கிறேன்.

ஒருவர் பணம் கட்டி அதை திரும்பபெறுவது என்றால் இங்கே விரிவான கணக்கு வேலை தேவை. வங்கிவேலை தேவை. அப்பணிகளைச் செய்வதற்கான குமாஸ்தா தேவை. அவருக்கு ஊதியம் அளிக்கவேண்டும். அப்படி ஊதியமெல்லாம் அமைத்து ஓர் அமைப்பை நடத்தினால் இந்தக் கட்டணத்தில் நடத்த முடியாது. இப்போதுள்ள இலவசச்சலுகைகளையும் அளிக்க முடியாது. ஆகவே அப்படி திரும்பக் கேட்பவர் இந்த அமைப்பின் நோக்கம் , மனநிலையை புரிந்துகொள்ளாதவர் என நினைக்கிறோம். அவரை நிரந்தரமாக விலக்கி விடுகிறோம். (மிக தவிர்க்கமுடியாத காரணத்தால் வரமுடியாதவர்கள் இன்னொரு நிகழ்வுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்)

இந்நிகழ்வில் மாணவர்கள் , அவர்களுக்குப் பொருளியல் சிக்கல் இருந்தால், இலவசமாகக் கற்கலாம். பிறர் அச்செலவை விரும்பினால் ஏற்கலாம், ஏற்கும் சிலர் உள்ளனர். பங்கேற்பாளர்களில் பலர் இலவசமாகப் பங்கேற்பவர்களே. ஆகவே இவை பொதுவாக இழப்பு இல்லாமல் நடந்தால் நன்று என்னும் நிலையில் உள்ளன. நீங்கள் மாணவர் என்றீர்கள். ஆகவே நீங்களும் பணம் இல்லாமல் கலந்துகொள்ளலாம். ஆனால் அப்படி பணம் இல்லாமல் பதிவுசெய்யும் மாணவர்கள் பலர் கடைசி நேரத்தில் அற்பமான காரணங்களால் வருவதில்லை. சினிமா வெளியாவதுகூட காரணமாக உள்ளது அவர்களுக்கு. ஒருவர் வருவார் என்று சொன்னால் சமையல் உட்பட அனைத்தும் அவருக்குமாகவே ஏற்பாடு செய்யப்படுகிறது. வராமலானால் அது இழப்பு. அதை அவர்கள் என்ணுவதே இல்லை. அப்படி ஒரு முறை வராமலானவரை உடனே நிரந்தர்மாக விலக்கிவிடுகிறோம்.

நீங்கள் விரும்பினால் பின்னர் கலந்துகொள்ளளாம்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைவிலக்குவது என்னும் அடிப்படை
அடுத்த கட்டுரைவாழ்வின் மீதான நம்பிக்கை , கடிதம்