அன்புள்ள ஜெயமோகன்,
நம்மைச் சூழ்ந்துள்ள கசப்பின் இருட்டிலிருந்து மீள்வதைப் பற்றி உங்களுடைய காணொளி அளித்த நிறைவு மிக அபாரமான ஒன்று. அதில் நீங்கள் சொல்கிறீர்கள், ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய வாரிசுகளுடன் உருவாகும் தொடர்பும் அவர்களிடம் மிஞ்சும மதிப்பும் தான் முக்கியமானது என்று.
‘தக்கார் தகவலர் என்பது அவரவர் எச்சத்தார் காணப்படும்’ என்ற வள்ளுவரின் கூற்றுக்கான அர்த்தமே அதுதான். எச்சம் என்பது மைந்தர்கள், மாணவர்கள்.விட்டுச் செல்லும் படைப்புகளையும் அதிலே சேர்த்துக் கொள்ளலாம் .
நீங்கள் யார் என்பதை நம் வழித்தோன்றல்கள் உணர்ந்தால் மட்டும் போதும். நம்மைச்சுற்றிலும் நம் செயல்களை தங்கள் அடிப்படை இயல்புகளைக் கொண்டு மதிப்பிடுவர்கள் தான் நிறைந்து இருக்கிறார்கள். மேன்மக்கள் தங்கள் மேன்மைகளால் அதை புரிந்து கொள்கிறாள். கீழ்மக்கள் தங்கள் கீழ்மைகளைக்கொண்டு அதை புரிந்து கொள்கிறார்கள். அது எந்த வகையிலும் முக்கியமல்ல என்ற உங்கள் கருத்து எத்தனை தொன்மையானது .ஆனால் இன்றும் எவ்வளவு தேவையானது!
எம்.பாஸ்கர்










