குடிமைப்பணி வெற்றி, வகுப்புகள்

மதிப்புக்குரிய ஆசான் ஜெ அவர்களுக்கு,

வணக்கம்.‌ நலமாநான் தங்களின் வாசகன் ஆரோக்கிய புஷ்பராஜ். 2012 முதல் தங்களை வாசித்து வருகிறேன்.‌ 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நித்யவனத்தில் தங்களுடைய புதிய வாசகர்களுக்கான அறிமுக வகுப்பில் கலந்து கொண்டேன். இலக்கிய ஆர்வத்தோடு கூடவே அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுக்கு என்னைத் தயார் செய்து வந்தேன்.

இதற்கிடையில் மாநில அரசின் குரூப் 2ஏ தேர்வில் தேர்ச்சி பெற்று கூட்டுறவு தணிக்கையாளராக அரியலூர் மாவட்டத்தில் 2024 முதல் பணிபுரிந்து வந்தேன். என்னுடைய ஊர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூசையப்பர் பட்டிணம் என்ற கிராமம். கடந்த ஆண்டு, என்னுடைய இறுதி வாய்ப்பில் அகில இந்திய குடிமைப்பணித்தேர்வின் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். பல ஆண்டுகளாக போராடி பெற்ற வாய்ப்பு. அதில் பங்கேற்பதற்கு முன்னர், சென்ற ஆண்டு ஜனவரியில் புத்தக கண்காட்சியில் தங்கள் பாதம் தொட்டு ஆசி பெற்றே டெல்லி சென்றேன்.

நேர்முகத்தேர்வில் 190 மதிப்பெண்கள்( actually it is very good marks) பெற்றேன். என்றாலும் கூட ஆறு மதிப்பெண்களில் அகில இந்திய குடிமைப் பணி கை நழுவிப்போனது. ஆறு மதிப்பெண்களில் இப்படி ஆகும் என்று எதிர்பார்க்க வில்லை. பெரும்சோர்வு

மீண்டும் குரூப் 2ஏ பணியைத் தொடர வேண்டும் என்பதை ஏற்கவே முடியவில்லை. இது பெரும் அலைச்சலுடைய பணிஉங்கள் தளத்தை திறந்து பார்க்க கூட முடியாத அளவுக்கு அழுத்தம். என் இலக்கிய ஆர்வம், வாசிக்க வேண்டிய கனவு, எழுத வேண்டும் என்ற பெருவிருப்பம் எல்லாம் என்ன ஆகும்? மூச்சு முட்டியது.‌ ஓரளவுக்கு பொருளியல் சுதந்திரம், வாசிக்க எழுத ஏதுவான வேலை வேண்டும்.

பிறகு, மனம் தளராமல், தமிழ்நாடு அளவில் மிக உயரிய போட்டித்தேர்வாகக் கருதப்படும் குரூப் 1 தேர்வில் பங்கேற்று, தற்போது தேர்ச்சி பெற்று, ASSISTANT COMMISSIONER OF COMMERCIAL TAXES என்று பொறுப்பு எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய ஆசியை மானசீகமாக எப்போதும் பெற்றுதான் என்னுடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன். எல்லாவற்றிற்கும் நன்றி.‌ உங்கள் எழுத்தின்றி நானில்லை.

ஆரோக்கிய புஷ்பராஜ்

 

அன்புள்ள ஆரோக்கிய புஷ்பராஜ் ,

முதலில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இது முக்கியமான ஒரு வாய்ப்பு. எல்லா வகையிலும் இதை நீங்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதிகார பதவி உருவாக்கும் அதிகாரம் சார்ந்த போதை, எளிதாக கை வர சாத்தியமான ஊழலுக்கான வாய்ப்புகள், அதன் ஊடாக கிடைக்கும் செல்வம் சார்ந்த கொண்டாட்டங்கள் ஆகியவற்றிற்குள் செல்லாமல் இருந்தீர்கள் என்றால் நீங்கள் நினைத்த எல்லாவற்றையுமே சாதிப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த பணியில் உண்டு. பி.எல்.சாமி, ஐராவதம் மகாதேவன் , தியடோர் பாஸ்கரன் போல தமிழில் மிக முதன்மையான உதாரணங்கள் உண்டு . மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜெ
முந்தைய கட்டுரைசூஃபி வகுப்புகள்- கடிதம்.