பிறமதக்கல்வி, கடிதம்

அன்புள்ள ஜெ

இஸ்லாமிய தத்துவ வகுப்புகளுக்கு ஏன் பொதுவாக ஆர்வமில்லாமல் இருக்கிறது என சொல்லியிருந்தீர்கள். இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் பிறரை மதமாற்றம் செய்வதில் மிகத்தீவிரமாக இருக்கிறார்கள். ஆகவே பிற மதங்களை மட்டமாகச் சித்தரித்துப் பேசுவது அவர்களின் வழக்கம். நாம் இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களிடம் அப்படிப் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் தயக்கமே இல்லாமல் பேசுவார்கள்.

(அண்மையில் ஒரு விடியோ பார்த்தேன். திரைப்பட நடிகர் அமீர் அவருடைய வீட்டு கல்யாணத்திற்கு எல்லாரையும் அழைத்திருக்கிறார். மற்ற மதத்தவர்கள் வருகிறார் என்று தெரிந்ததும் உடனே அங்கேயே மதப்பிரச்சராம் ஆரம்பிக்கிறார். எப்படி பல தெய்வங்களைக் கும்பிடலாம். அல்லா தவிர பிற தெய்வத்தை கும்பிடுவது பாவம் என்றெல்லாம் பந்தல் முழுக்க எழுதி ஒட்டிவைக்கிறார். புகைப்படம் வெளியானபோது ஆச்சரியமாக இல்லை. இதை அவர்கள் அனைவருமே செய்கிறார்கள்)

அதோடு அவர்களால் மதத்தை அரசியலில் இருந்து பிரிக்கவும் முடிவதில்லை. மதம் சார்து பேசினால் அரைமணிநேரத்தில் அரசியலுக்கும் அதிகாரத்திற்கும் பேச்சு நகர்ந்துவிடும். நான் மதத்தை அரசியலுடன் சேர்க்க விரும்பவில்லை. எனக்கு இந்து மத அரசியலை ஒருவர் பேசினாலும் ஒவ்வாமைதான். அவர்களையும் கிட்டே சேர்ப்பதில்லை.

இந்தவகையான நடத்தை நமக்குச் சங்கடத்தை அளிக்கிறது. அந்த இடத்தில் அவர்களுடன் எதிர்த்துபேசி சண்டைபோட நம்மால் முடிவதில்லை. சரி என்று ஒதுங்கிவிடுவோம். ஏனென்றல் நம்முடையது ஒரு மதம் சார்ந்த வாழ்க்கை தானே ஒழிய தீவிரமான ஒற்றைப்படையான நம்பிக்கை அல்ல. நம்முடைய நம்பிக்கை சரி மற்றதெல்லம் தப்பு என நாம் சொல்வதில்லை.மிகப்பெரிய ஒரு தர்மசங்கடம் இது.இதைத்தான் நான் தவிர்க்க நினைக்கிறேன். இதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சா. ஆன்ந்தராஜ்

 

அன்புள்ள ஆன்ந்தராஜ்

ஒன்று, நம்மிடையேயும் மூர்க்கமான நம்பிக்கைவாதிகள் உண்டு. நான் சந்தித்த பல வைணவ அடிப்படைவாதிகள் மிகுந்த சங்கடம் அளிப்பவர்கள். என் வீட்டுக்கு வந்த ஒரு வைணவர் அவர் வைணவர் அல்லாத பிறரிடமிருந்து தன்ணீர்குடிப்பதில்லை, ஏனென்றால் அவர்கள் பாவிகள் என்றார். நம்பிக்கைவெறி எங்கும் உள்ளதுதான். அது ஆன்மீகம் அல்ல.

நாங்கள் நடத்தும் வகுப்புகளில் பிற மதங்களின் மீதான எதிர்ப்பு. மத அரசியல், மதப்பிரச்சாரம் மூன்றும் இல்லை. இவை மதத்தின் சாரமான ஆன்மிகம், தத்துவம் ஆகியவற்றை மட்டுமே கற்பிக்கும் வகுப்புகள்தான்

ஜெ

முந்தைய கட்டுரைகாணொளியும் வாசிப்பும்
அடுத்த கட்டுரைவரலாறு, தத்துவம், இலக்கியம்- கடிதம்