அன்புள்ள ஜெ
நான் உங்கள் உரைகளைக் கவனித்துக்கொண்டே வரும் ஒரு வாசகன். உரைகளைக் கவனிப்பது எனக்கு எளிமையானதாக இருக்கிறது. ஏனென்றால் நான் தினம் 1 மணி நேரம் பஸ்ஸிலே பயணம் செய்பவன். உரைகளைக்கேட்டுக்கொண்டே செல்லமுடிகிறது. இந்த உரைகளில் ஒன்றில் நியாய சாஸ்திரப்படி கடவுள் உண்டு என்பதற்கான தர்க்கங்களை நியாயகுசுமாஞ்சலி என்ற நூலில் இருந்து எடுத்துச் சொல்லியிருந்தீர்கள். அந்த தர்க்கங்கள் எல்லாமே அபாரமானவையாக இருந்தன. அன்றிருந்த ஆஸ்திக- நாஸ்திக விவாதங்களே இந்த அளவில் உயர்ந்த நிலையில் நடந்துகொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஒரு விஷயமாக எனக்குத் தோன்றியது. நியாயகுசுமாஞ்சலி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா? வாசிக்கமுடியுமா?
டி.சந்திரகுமார்
அன்புள்ள சந்திரகுமார்,
நியாயகுசுமாஞ்சலி உட்பட்ட தத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதில்லை. தேவை என்றால் ஆங்கிலத்தில் வாசிக்கலாம். ஆங்கிலப்பதிப்பகங்கள் எவை என தெரியவில்லை. மோதிலால் பனாரஸிதாஸ் போன்ற பதிப்பகங்களில் தேடிப்பார்க்கலாம்.
ஆனால் தத்துவ நூல்களை முறையான, தொடர்ச்சியான தத்துவப்பயிற்சியின் ஒரு பகுதியாகவே வாசிக்கமுடியும். அதுவே பயன்தரும். உதிரிகளாக அங்கிங்கே நூல்களை வாசிப்பது ஒருவகையான கலவையான தகவலறிவை மட்டுமே அளிக்கும். அது பலசமயம் அறியாமையையே உருவாக்கும்.
ஜெ