
மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய ஆசிரியருக்கு வணக்கம்,
கடந்த அக்டோபர் 17, 18 நித்ய வனத்தில் நடந்த உருது இலக்கிய வகுப்பில் கலந்து கொண்டேன். வகுப்பாசிரியர், உருது மொழி அறிஞர், ஃபைஸ் காதிரி அவர்களின் கற்பித்தல், பகிர்தல் முறை மிகவும் குறிப்பிடத் தக்கது.இனிமையான ஒருமை தந்த ஒரு கடவுள் வாழ்த்தோடு வகுப்பைத் தொடங்கினார். இரண்டாம் நாள் வகுப்பு முடியும் வேளை அதே பாடலை மீண்டும் நாங்கள் அவரைப் பாடச்சொல்லிக் கேட்டு வகுப்பு நிறைவு பெற்றது.
மிக எளிமையாக வகுப்பு கற்பிக்கப்படப்போகும் விதம், வரிசை, தலைப்புகள் தெரிவிக்கப் பட்டது. உருது மொழியின் வடிவம், வரலாறு பற்றிய பல உண்மைகளை அடுக்கினார். இன்று வரை நாம் பேச்சு வழக்கில் பயன் படுத்தும் வார்த்தைகளில் உள்ள உருது மொழி வார்த்தைகளையும் குறிப்பாக அதன் அர்த்தங்களையும் விளக்கி, ஆச்சரியம் தந்து கவனத்தை ஈர்த்துக்கொண்டார்.

“சித்திரங்களின் மூலமாகவே எழுத்து உருவாகியுள்ளது” இயற்கையாக ஒரு மொழி தன்னை ஆக்கிக் கொள்ளும் விதம் தொடங்கி, சித்திரங்களிலிருந்து உருவான எழுத்துக்கள், எப்படி அவை தம் அர்த்தங்களை சுட்டி வடிவாக்கப்பட்டன என வரைந்து காட்டினார். பின் தமிழ், அரபி, ஆங்கிலம் என வெவ்வேறு மொழிக் குடும்பங்களின் ஆரம்ப கால எழுத்துகளுக்குள் உள்ள மருவிய தொடர்பை அவர் வரைந்த படங்கள் மிகவும் சுவாரசியமாக விளக்கின.
இப்படியாக எழுத்துக்களின் அழகியல் மற்றும் சொற்களின் வேர்ச் சொல்லியல் அம்சங்களுடன் வகுப்பு தொடங்கி கவிதைகள், பாடல்கள், எழுத்தாளர்களை நோக்கி நகர்ந்தது. “மொழி தனிமனித அல்லது குழுமங்களின் கட்டுப்பாடு உடையதல்ல. காலப் பரிணாமமே அதன் அடித்தளம்“

உருது இந்தியாவிலேயே பிறந்து வடக்கு தெற்காக பரந்து செழித்த வரலாற்றையும், ஒவ்வொரு பண்பாட்டுக் கலப்பாலும் கலைஞர்களாலும் உருது மொழி பெற்ற வளர்ச்சியைப் பல சம்பவங்களுடன் கதையாடல்களாகக் கூறிய விதம், எனக்கு பிடித்த வரலாற்று வகுப்பில் இருந்த உணர்வைத் தந்தது.
வகுப்பின் இப்பகுதியில் பல மொழியியல் ஆய்வுகள் மற்றும் தென்னிந்தியாவின் ஆரம்ப கால உருது மொழி வளர்ச்சிக்கான பங்குகள் குறித்த ஆசிரியரின் தகவல்கள், உருது மொழி இவ்வளவு காலமும் நமக்கு மிகுந்த அருகாமையிலேயே இருந்து வருவதை நன்கு உணர்த்தியது.
“கஸல் – உருதுக் கவிதைகளின் மானம் ! ” இரண்டாம் நாளின் முதல் பகுதி கஸல் பாடல்களின் தோற்றத்திலிருந்து தொடங்கியது. ” 1200 ஆண்டுகளுக்கு முன், கஸீதா (Qaseeda) என்ற நீள்கவிதை வடிவு அரபி மொழியிலிருந்து பாரசீக (பெர்ஸிய) மொழிக்கு போகிறது. பாரசீகத்தின் ரூத்கி என்ற கவிஞர் கஸீதாவின் இரண்டாம் பகுதியை மட்டும் எடுத்து அமைத்ததில் பிறந்தது இந்த கஸல்” எனத் தொடங்கப்பட்ட வகுப்பு தொடர்ந்து கவிதைகள் மற்றும் பாடல்களின் வழி அவற்றை இயற்றிய பாடிய கலைஞர்களின் வரலாற்றோடு சேர்த்து தொகுத்து வழங்கப்பட்டது.

“ஆட்சி மாற்றங்களுக்கேற்ப உருது இலக்கியம் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பின் மிர்ஸா காலிப் உருதுவை கஸல் கொண்டு மீட்கிறார்” இதன் பிறகு நான் எழுதிக்கொண்ட குறிப்புகளைத் திருப்பிப் பார்க்கையில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு நாவல், ஒரு பாடல், ஒரு கஸல் கவிதைத் தொகுப்பு, ஒரு திரைப்படம் என அருமையான ஒரு கோப்பு அமைந்துள்ளது.
இத்தொகுப்பை மட்டும் எடுத்துக் கொண்டு சில நாட்கள் ஒதுக்கி ரசிக்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது ஆசிரியரின் பரிந்துரைகள்.இதைத் தொடர்ந்து, கஸல் கவிதைகளை ஒவ்வொன்றாக அவர் சொல்லச் சொல்ல நான் குறிப்பெடுப்பது தடைபட்டுப் போனது. மக்கள் Wah Wah என பாராட்டினார்கள். நான் அவர் சொன்ன கவிதைகளை முன்னும் பின்னுமாய் மனதில் சொல்லிப் பார்த்தே ஆழ்ந்து போயிருந்தேன்.
யாருடைய தேடல் உன்னை நாடோடியாக அலைய வைக்கிறது
பாதையும் நீயே
பயணமும் நீயே
இலக்கும் நீயே
அறிவைத் தாண்டிச் சென்றுவிடு
இவ்வொளி
பாதையின் விளக்கு தான்
இலக்கு அல்ல
பூவில் மணமாக இருப்பதுவே
மின்மினியில்
ஒளியாக இருக்கிறது
என சில தத்துவார்த்தமாகவும்,
அவள் நினைவு
அழைப்பதுமில்லை
தட்டுவதுமில்லை
பெரிய கர்வத்தோடு
உள் நுழைகிறது
இரவு முழுதும்
ஈரக்கண்ணில் நீ
ததும்பிக் கொண்டிருந்தாய்
சுவாசம் போல
வந்துகொண்டிருந்தாய்
போய்க் கொண்டிருந்தாய்
அவளுக்கோ
நான் காதலித்தால்
கோபம் வருகிறது
எனக்கோ
அவள் கோபம் கொண்டால்
காதல் வருகிறது
என சில இறையன்போடும் காதலோடும், தன் வடிவத்தால் மேன்மேலும் தேடிப்படிக்க ஆர்வம் தந்தது. வகுப்பிற்கு பின்னும் ஆசிரியரிடம் எழுத்தாளர்களின் பெயர்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டோம்.
“பாரசீக கவிஞர்கள் கஸலைத் தோற்றுவித்திருந்தாலும் இந்திய கவிகளே அதை மெருகூட்டினர்”
இதற்கு மேலும் அழகான அமர்வு காத்திருந்தது. தேர்ந்தெடுத்த கஸல் பாடல் நிகழ்வுகள் திரையில் காட்டப்பட்டது. ஒரு பெருமலையை, ஒரு கழிமுகத்தை பார்த்து வியக்கும் தருணத்தை மனிதப் புலன்களின் ஆற்றல்களும் தரும் என உணர வைக்கும் வகையில் அமைந்திருந்தன அப்பாடல்கள்.
( Ustad Nusart Fateh ali khan –ஐ போன்ற கலைஞர்கள் பற்றித் தெரிந்து கொண்டதே பெருமகிழ்வு. அவரின் சில பாடல்கள், என் இஸ்லாமிய நண்பர்களோடு சொந்த ஊர் திருச்சியில் சந்தனக்கூடு விழாவில் முழுதும் புரியவில்லை எனினும் முழு இரவும் நான் ரசித்துக் கேட்ட பாடல்களை நினைவு படுத்தியது)
மொழி புரிதலுக்காக, அடுத்த பாடல் மாறும்போது அப்பாடல் வரிகளுக்கான நிகர் அர்த்தத்தை ஆசிரியர் விளக்கி பின் புரிதலோடு பாடலைக் கேட்டு ரசித்தது, மேலும் உருது பாடல்களை கேட்க நல்ல தொடக்கமாய் அமைந்தது.
மொத்த வகுப்பிலிருந்தும் சில பாடல்கள் மற்ற பாடல்கள் கேட்ட பின்னும், சில கவிதைகள் மற்ற கவிதைகள் கேட்ட பின்னும் மனதில் தனியிடத்தில் தங்கியிந்தது.
இவ்வாறாக அமைந்த சாக்கி / ஸாக்கி – எனும் ஒரு குறியீடு, அந்த வகைக் கவிதைகள் பற்றிய நீள் கற்பனையில் எனை ஆழ்த்தியது. இது ஒரு மது தயாரிப்பவரை மையமாகக் கொண்டு எழுத்தப்படும் கவிதை வகை.
அவர் பெண்பாலாகக் கருதப்படுவார் எனவும், மேலும் அவர் தன்னைத் தேடி வருபவர்களின் வயது அறிந்து, தேவை அறிந்து அதற்கேற்ப ரசாயணம் சேர்த்து மதுவைக் கலந்து தருவார். பின் ஆசிரியர் இக்குறியீட்டில் கடவுளை, ஸாக்கியாக உருவகித்து கவிஞர்கள் பாடுவர் என்றதும் இக்கவிவகை மனதில் தனிகவனம் பெற்றது.
மேலும் இந்த வகுப்பில் கவிஞர் தேவதேவன் அவர்களும் எங்களோடு மாணவராக இருந்தார். வகுப்பிற்கு பின் பலரும் அவரிடம் சென்று கவிதைகள் பற்றிய சில கேள்விகள் பகிர்ந்தோம், சிறு நடை கூட்டிச் சென்று கவிதைகளின் வழி அவரின் பேரனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார். கவிஞரின் புதிய நூல் பற்றி நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டு அவர் கையெழுத்துடன் “நல்லதோர் வீணை” ஒரு பிரதியும் பெற்றுக் கொண்டேன்.
இவ்வகுப்பு மூலம் ஒருமித்த தேடல், இரசனை கொண்ட புதிய நண்பர்கள் கிடைத்தது முக்கிய பேறு.
மேலும் ஆசிரியர் ஃபைஸ் காதிரி அவர்கள் உருதுவிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த, எழுத்தாளர் குத்ரத் உல்லா ஷஹாப் (Qudrat Ullah Shahab) எழுதிய நாவல் ‘இறைவா‘ பற்றி அறிய வந்தது. அப்பொழுதே அவரிடமிருந்த ஒரு பிரதியையும் கையெழுத்துடன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது.
உருது கற்க விரும்புபவர்களுக்கு பகிர இன்னொரு தகவலும் தந்தார். தற்போது அரசு சான்றிதழுடன் இலவச புத்தகங்களும் வழங்கப்படும் ஒரு வருட உருது மொழிப் படிப்பு, சென்னை, கோவை, திருச்சி ஆகிய மைய பல்கலைகள் வழி தபால் படிப்பாக கிடைப்பதன் வாய்ப்பையும் தெரிவித்தார்.
இந்த வகுப்பு எனக்கு கிடைத்த அனுபவங்களில் மிக முக்கிய ஒன்றாக கருதுகிறேன்.இந்தியப் பண்பாட்டை இந்திய இலக்கியத்தை முழுதும் புரிந்து கொள்ள, உருது இலக்கியத்தையும் தெரிந்து கொள்வதின் அவசியத்தை உணர்த்தி, அதை இவ்வாறான அரிய அனுபவமாக அளித்தமைக்கு தங்களுக்கும் முழுமையறிவு குழுவிற்கும் மனமார்ந்த நன்றி.
–அருள் இனியன்,
திருச்சி.











