அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய நியூயார்க் விழாவில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இலக்கிய விழா தொடங்குவதற்கு ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னரே அனைத்து இடங்களும் நிறைவது என்பது மிக அரிய ஒரு செய்தி. அதிlum அத்தனை பேர் பணம் கட்டி வருகிறார் என்பது அமெரிக்காவிலேயே ஒரு புதிய விஷயம் தான். நீங்கள் இலக்கியத்தில் உருவாக்கி இருக்கும் மிகப்பெரிய ஒரு வாசகர்த திரளைத் தான் இந்த ஆதரவு சுட்டிக் காட்டுகிறது. உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இலக்கியம் என்பது இன்றைக்கு ஏதோ ஒரு வகையில் கல்விக்கூடங்களை சார்ந்ததாக அமெரிக்காவில் மாறியிருக்கிறது . அங்கே எப்படி படிக்க வேண்டும் என்றும் எப்படி எழுத வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கிறார்கள். அந்த வகையிலே எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான நுணுக்கமான சிக்கல்கள் இங்கே இலக்கியத்திலே உண்டு.
நேரடியாக மக்களிடம் பேசி மக்களிடம் இருந்து கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் தமிழ் போன்ற மொழிகளில் இருந்து இலக்கிய படைப்புகள் இங்கே வரும்போது ஒரு மாற்றம் உருவாகும் என்று நான் நம்புகிறேன் . தமிழுக்கு இங்கு இடம் கிடைப்பது என்பதை விட நான் அமெரிக்கர்களுக்கு முக்கியமாக ஓர் அடிமட்டத்தில் இலக்கியம் எப்படி செயல்படுகிறது என்ற ஒரு சித்திரம் மனதில் வரும் என்பதுதான் முக்கியம் என தோன்றுகிறது
அழ. சுப்ரமணியம்










