அன்புள்ள ஜெ,
உங்கள் காணொளியில் “எதற்காக எழுத வேண்டும்” பார்த்த பிறகு என் மனதில் நினைவில் நின்றதை எழுத வேண்டும் என்று தினமும் வகுப்பு முடிந்த பிறகு நினைவுக் கூர்ந்து எழுதியதைத் தொகுத்து எழுதுகிறேன்.
விஜய் பாரதி மற்றும் ஈஸ்வரமூர்த்தி, சிறுவர்கள் 15 மற்றும் எல்லா வயதினரும் ஒன்று சேர்ந்து பறவைப் பார்த்தல் பயணம் மிகவும் சுவாரசியமாக தொடர்ந்தது. நான் பல மாதங்கள் காத்திருந்து பதிவு செய்து வந்த ஒன்று. தத்துவ வகுப்பிற்கு இடையில் இது மாதிரியான வகுப்புகள் தத்துவ வகுப்பை மேலும் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.
குருஜியின் யோகா வகுப்பில் தியானமுறை பயிற்சியில் கண்களை மூடிக் கொண்டு பறவைகளின் ஓசையை கேட்கும்படி சொல்வது நினைவில் வந்தது. ஒரு படி மேலாக பறவைப் பார்த்தல் அறிமுக வகுப்பு எனக்கு பெரிய வாசலை திறந்து வைத்தது. இப்போது விடியற்காலை பறவைகளின் ஓசைகள் தான் என்னை எழுப்பிவிடுகின்றன.
முதல் நாள்
பறவைகளின் அறிமுகம் கொடுத்துவிட்டு மாலை 4 மணியிலிருந்து 6 மணி வரை பறவை பார்க்க சென்றோம். அதற்கு முன்பாக வானம் இடியுடன் சற்று மிரட்டி மழைப் பொழிய “ஆகா வெளியே போக முடியாது போல இருக்கே” என்று நினைத்தேன். சரியாக மாலை 3.45 மணிக்கு மழை நின்றுவிட்டது. சூடு தனித்து காலநிலை இதமாக இருந்தது. ஈசல்கள் பறக்க பல பறவைகள் அதற்காக மரத்தின் உச்சியில் காத்திருந்தனர். எல்லா பறவைகளுக்கும் நல்ல வேட்டை. எங்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நாங்கள் இரு குழுவாக பிரிந்து யானைக்குடில் வரை பார்த்துக் கொண்டே போவதாக முடிவெடுத்து நான் முதலில் பார்த்தது ‘கரிச்சான்’தான் (black drongo). ரெட்டைவால் குருவி, எல்லா பறவையும் துரத்தும், எந்த பறவைகளுக்கும் பயப்படாத பறவை கரிச்சான். அதன் பிறகு வெண் புருவ சின்னான் (White-browed Bulbul) அல்லது தவிட்டுக்குருவி கூட்டமாக பறந்து சென்று இன்னொரு மர கிளையில் உட்கார்ந்தன. நான் இதை பார்த்திருக்கின்றேன் அது எழுப்பும் ஒலியையும் கேட்டிருகின்றேன் ஆனால் பெயர் தெரியாமல் தான் இருந்தேன். எனக்கு தெரிந்த பறவைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வளவு கூர்ந்து கவனித்துக் கேட்டதில்லை. அதை பெரிதாக பொருட்படுத்தவும் இல்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வகுப்புகளுக்கு வந்த பிறகுதான் உதிரி எண்ணங்களிலிருந்து விடுபட்டு நம்மைச் சுற்றி நடப்பதை கவனிக்க ஆரம்பித்தேன்.
ஹாலிலிருந்து யானைக்குடிலிக்கு செல்ல ஒரு மணி நேரம் எடுத்தது இதுவே முதல்முறை. ஒரு தியான பயணமாகவே இருந்தது. சத்தம் போடாமல் இருக்க ஆசிரியர் உத்தரவு. சிறுசுகள் எங்கே கேட்க போகிறது. மீண்டும் சிறுசுகளை அமைதியாக இருக்கவில்லையென்றால் பறவைகளை பார்க்க முடியாது என்று சொல்ல எல்லோரும் அமைதி. மயில் ஒலி எழுப்ப அதை தொடர்ந்து சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill) பறந்து சென்று ஒரு கிளையில் அமர்ந்தது. 45 நிமிடம் அமைதியாக உட்கார சொன்னார் ஆசிரியர்.
வகுப்பில் ஆசிரியர் ஓசை அல்லது சத்தத்தை வைத்து பறவைகளை அறிதல் பற்றி பறவைகளின் ஒலியை play செய்து காட்டினார். அதை வைத்து பறவைகளின் ஒலியைக் கண்டுபிடித்து அதன் பெயரைச் சொன்னார். கேட்ட மாதிரியே இருந்தது ஆனால் பெயர் நினைவில் இல்லை. சிறுவர்களும் நாங்களும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டு இருந்தோம். இரண்டு மணி நேரம் தியானமாக இருந்ததை தெரியாமல் இருந்தேன்.
இரவு வகுப்பில் எத்தனை பறவைகள் பார்த்தோம் என்று கணக்கெடுக்கையில் 20-க்கும் மேல் பறவைகளைப் பார்த்திருந்தோம். பொதுப் பறவைகளின் குறுங்கையேடு உதவியுடன் பார்க்கும் போது நாங்கள் பார்த்த பறவைகளை நினைவுக் கூற முடிந்தது. சிறார்களுடன் நாங்களும் சிறுகதைக் கேட்டு முதல் நாள் வகுப்பு மகிழ்ச்சியாக சென்றது.
அடுத்த நாள் காலை 5:45 மணிக்கு எல்லோரும் கூடி டீ குடித்துவிட்டு 6 மணியளவில் பறவைப் பார்ப்பதற்கு செல்வதாக சொல்லி வகுப்பு முடிந்தது. நான் யோசித்தேன் கடைசியாக படிப்பதற்கு எப்போது எழுந்தேன் என்று. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இறுதியாண்டு தேர்வுக்கு முன்னால் ஒரு மாதம் எங்கள் வகுப்பு ஆசிரியர் வீட்டில் தங்கி படித்தேன். 30 மாணவர்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். வருடா வருடம் அவர் வீட்டில் தங்கி படிப்பது வழக்கம். அவரது மனைவி அனைவருக்கும் காலை உணவு சமைப்பார். அதிகாலை 4:30 மணிக்கெல்லாம் எழுப்பி விடுவார்.
இரண்டாம் நாள்.
சரியாக 6 மணியளவில் பறவைப் பார்க்க பயணம் தொடர்ந்து. புத்தர் சிலைக்கு சற்று முன்னால் பறவைப் பார்க்க தொடங்கினோம். சிறுவர்கள் உற்சாகமாக இருப்பதைக் கவனித்தேன். புத்தர் சிலையிலிருந்து நித்தியவனம் நுழைவாயில் தாண்டி செல்வதற்கே பறவைப் பார்த்தப்படி ஒரு மணி நேரம் ஆகியது. அங்கிருந்து main road போவதற்கு அடுத்த அரைமணி நேரம் ஆகியது. வல்லூறு (Shikra) என்ற பறவை இரை கொல்லிப் பறவைகள் இனத்தை சேர்ந்தது. நான் எங்கள் வயல் வெளியின் மேல் பறந்தபடி பார்த்திருக்கிறேன். சித்திரை, வைகாசி மாதங்களில் நெல் போடுவதற்காக நிலத்தை உழுது அதில் தண்ணீர் விடப்பட்டிருக்கும். அதன் பிறகு கூகை (Barn Owl) இன்னொரு பட்டுப்போன மரத்தின் உடைந்த கிளையின் நுனியில் உள்ள பொந்துக்குள் மரத்தோடு மரமாக அமர்ந்திருந்து. ஒரு மரத்தில் பறவை இருப்பதை ஒருவர் பார்த்துவிட்டு அதை உடன் இருப்பவருக்கு மரத்தின் அடையாளத்தை காட்டி அதை ஒரு கடிகாரம் போல கற்பனை செய்து கொண்டு 12,3,6,9 என்று ஆசிரியர் சொன்னது நினைவிற்க்கு வந்தது. இது பொதுவாக தெரிந்தாலும் கால போக்கில் எல்லாம் மறந்து, மாடு நுனி புல் மேய்வது போல வாழ்க்கை வாழ்ந்து, இலக்கியத்தில் உள்ளே நுழைந்த பிறகு தான் பாத்திரம் தேய்த்து பளிச் என்று இருப்பது போல இப்போது எல்லா புள்ளிகளையும் இணைக்க முடிகிறது. கண்ணைக் கசக்கிக் கொண்டு புதிதாக பார்ப்பது போல பார்க்கிறேன். Main road வழியாக மெதுவாக நடந்து வந்து சாலையின் ஓரத்தில் இருக்கும் சிறு சிறு கல்லுக்கு மேலே மலையைப் பார்த்த படி அமர்ந்தோம். ஈஸ்வரமூர்த்தி அனைவரையும் கிழக்கிலிருந்து மேற்காக குறைந்தது பத்து நிமிடம் பார்க்கச் சொன்னார். நான் ஒரு நாளும் அது மாதிரி மலையை அந்த கோணத்தில் பார்த்தது இல்லை. பொதுவாக மலை, அதன் மேல் செல்லும் மேகங்கள், அங்கு அடிக்கும் காற்று அதை சிறிது நிமிடம் ரசித்து விட்டு செல்வது வழக்கமாக கொண்ட ஒன்று. தொடர்ந்து பத்து நிமிடம் பார்க்க முடியாமல் போனாலும் அதில் ஒரு அமைதி இருப்பதை கவனிக்க முடிந்தது. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும். பல வகுப்புகளுக்கு வந்தாலும், இதுவே முதல் முறையாக அங்கிருந்து மேட்டூர் அணை இருப்பதை பார்த்தேன். இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்களாக மாறிய தருணத்தைப் பார்த்து வியந்தேன். இயற்கையோடு இயற்கையாக, ஆந்தை மரமோடு மரமாக இருப்பது போல இருப்பதை உணர முடிந்தது. இந்த மாதிரி பயிற்சி இல்லாமல் இது சாத்தியப்படாது என்பதே உண்மை. கண்மூடி தியானம் செய்யும் முறை ஒன்று. இது மாதிரி இயற்கையோடு இருந்து தியானிப்பது இன்னொரு முறை. எனக்கு மிகவும் உகந்ததாக இருந்தது.
இங்கு நடக்கும் ஒவ்வொரு முகாமும் திரும்ப திரும்ப ஒன்றையே வலியுறுத்துகின்றன. அதாவது ஒருவன் தன்னை அடையாளம் காண பல விஷயங்களில் தன்னைப் பொருத்தி பார்த்துதான் தனக்கு எது சரியானது என்று தெரிந்து கொள்ள வேண்டும். எது உகந்தது என்று ஆழ்மனம் அறியும் ஆனால் மொழியால் அதை கடத்த முடியாது.
மணிப்புறா மின்சாரக் கம்பத்தில் அமர்ந்தபடி ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது. கவுதாரி ஒலி எழுப்ப மறுமுனையில் இருந்து பதில் ஒலி எழுப்பியது. விஜய் சார் “மனிதர்கள் கூட்டமாக வருகிறார்கள். சற்று எச்சரிக்கையாக இருக்கவும்” என்று விளையாட்டாக சொல்ல நாங்கள் அனைவரும் சிரித்தப் படி நடக்க ஆரம்பித்தோம்.
தெற்கத்தி மின்சிட்டு (Orange Minivet) மரத்தின் காய்ந்த கிளையின் நுனியின் உச்சில் உட்கார்ந்து காட்டை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. அதை சிறிது நேரம் binocularல் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு புதுவித அனுபவமாக இருந்தது. எத்தனை ஆயிரம் வருடங்கள் சாட்சியாக இருந்திருக்கும்? எத்தனை நிகழ்வுகளை பார்த்திருக்கும்? எல்லாவற்றையும் தெரிந்தும், பார்த்தும், மௌனமாக “சாட்சியாக” மட்டும் இருப்பதாக எனக்கு தோன்றியது.
கல்லுக்குருவி (Pied Bushchat) கருப்பு கால்கள், மண்டையளவு அதன் அலகு, இறக்கையின் ஓரம் ஒரு வெள்ளைக் கோடு, கையளவு உள்ள பறவை மின்சாரக் கம்பியில் அமர்ந்தபடி நான்கு ஸ்வரங்களில் ராகத்தை எழுப்பிக் கொண்டிருந்தது. என்ன ராகமாக இருக்கும்?
பத்து மணிக்கு வகுப்பு தொடங்கியது. முதலில் காலையில் பார்த்த பறவைகளின் ஒலியை வைத்து அது என்ன பறவை என்று சொல்ல வேண்டும். அதற்கு முன்பாக காலை தொடங்கிய இடத்திலிருந்து எந்த பறவைகளைப் பார்த்தோம் என்று நினைவுக்கூர்ந்தோம். அதில் எனது அருகில் இருந்த சிறுவன் வரிசையாக சொல்ல ஆரம்பித்தான். இதை எப்படி journal செய்வது என்பதை அதாவது பறவை பார்த்த இடம், பறவையின் குறிப்பீடுகள், வண்ணம், பறவையின் அளவு, சிறியதா அல்லது பெறியாத, கைக்கு அடக்கமா என்று அதன் பின் அங்க அடையாளங்கள், முடிந்தவரை எழுதலாம் அல்லது பறவையை நினைவுக்கூர்ந்து வரையலாம். பறவை மட்டும் இல்லாமல் வேறு எதைப் பார்த்தோமோ உதாரணமாக மலை, மரம், மரத்தின் கிளைகள், கிளைகளில் உள்ள இலைகள், இலையில் உள்ள புழு, புழுவை தூக்கி செல்லும் பறவை என்று எதை வேண்டுமானாலும் அதைப் பற்றிய குறிப்பை எழுதலாம் அல்லது வரையலாம் என்றார் விஜய் பாரதி.
நினைவில் வைத்துக் கொள்ள இதை விட வேறு சிறந்த பயிற்சி இல்லை என்று தான் நினைக்கிறேன். உங்கள் அபுனைவு வகுப்பில் கூறியது என் நினைவுக்கு வந்து சென்றன.
உங்கள் பயணக் கட்டுரைகள், நாவல்கள், கடிதங்கள் நீங்கள் எழுதும் உங்கள் விரிவான தெளிவான சொற்றொடர் நான் தினமும் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்று கூட வெண்முரசில் இருந்து “பிரயாகை” படித்துக்கொண்டிருக்கும் போது உதாரணமாக…
பிரயாகை – 73
பகுதி பதினைந்து : அன்னைவிழி – 2
“அன்னையின் பாதம் அமைந்த தாமரையைச் சுற்றி மலர்முற்றம் அமைக்கப்பட்டு அதில் நூற்றெட்டு அகல்கள் நெய்ச்சுடர் கூப்பி மெல்ல அசைந்தன. இருபக்கமும் நூற்றெட்டுத் திரிகள் சுடர்ந்த அடுக்கு விளக்குகள் கொன்றைப்பூங்கொத்து கீழிருந்து மலர்ந்ததுபோல நின்றிருந்தன. அன்னையின் நேர்முன்னால் பலிமண்டபம் இருந்தது. அதில் தாலத்தில் வைக்கப்பட்ட குருதிச்சோற்றை செம்பட்டை விலக்கி மலரிட்டு வைத்தனர். பல்லியமும் முழவும் பறையும் கொம்புகளுமாக சூதர்கள் சூழ்ந்து நின்றனர். மங்கலப்பரத்தையர் இரு வரிசைகளாக நின்றனர்.”
கண்முன்னால் காட்சிகள் நிற்கின்றன.
அடுத்து நான்கு மணிக்கு பறவை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் மதிய உணவிற்கு தயாரானோம். வகுப்பில் கற்றுக் கொள்வது அல்லது தெரிந்து கொள்வது ஒரு செய்தியே. அதை வெகு விரைவில் மறந்து விடுவது வழக்கம். அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறாத வரைக்கும் அதன் முழு பயன்களையும் அடைய முடியாது. இதை இப்போது எழுதும் போது நான் அதை உணர்கிறேன். ஒவ்வொரு வகுப்பிலும் நான் கற்றுக்கொண்டதை, ஏதாவது ஒன்றை அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக நான் மாற்றி கொண்டிருக்கிறேன். வாசிப்பு, யோகம், சிற்பக்கலை, தாவரவியல் என்று தினந்தோறும் என்னையறியாமலேயே அதில் உள்ள ஓர் அம்சம் ஒரு அங்கமாக மாறி கொண்டிருகின்றன. இப்போது பறவை பார்த்தலும் சேர்ந்துக்கொண்டு எனக்கான உலகம் விரிந்து கொண்டே செல்வதை என்னால் உணர முடிகிறது மற்றும் மன நிறைவை அளிக்கிறது.
வெயில் சற்று தளர்ந்திருந்தது. நான்கு மணியளவில் பறவை பார்க்க பயணித்தோம். நித்தியவனத்திலிருந்து வெளியே வடக்கே சென்று பறவை பார்ப்பதாக முடிவெடுத்து போகும் வழியில் வெண் புறா, வெண் புருவ சின்னான் (White-browed Bulbul), தெற்கத்தி மின்சிட்டு (Orange Minivet), வால் காக்கை (Rubus Treepie), கௌதாரி (Grey Francolin), செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) என்று பறவைகளைப் பார்த்தப்படி சென்றோம்.
காட்டின் விளிம்பில் யானை வருவதை தடுப்பதற்காக ஆழமான குழி வெட்டப்பட்டிருந்தது. அதற்கு முன்னால் கொஞ்சம் உள்ளே சரிவான இடத்தில் மரங்களும் செடிகளும் அடர்ந்தப்படி இருந்தது. சில் வண்டுகளின் ரீங்காரம் கேட்க அடுத்த ஒரு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து பறவைகள் பார்ப்பதற்காக ஆங்காங்கே கிடைக்கும் இடங்களில் அமர்ந்தோம். விஜய் சார் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்து விட்டு தூரத்தில் யானையின் சத்தம் வருகிறது என்றார். நாங்கள் எல்லோரும் ஒருவரைப் பார்க்க சற்று பயம் முகத்தில் பரவ ஆரம்பித்தது, ஈஸ்வரமூர்த்தி சார் சற்று கீழே சென்று காது கொடுத்து கேட்டு விட்டு “ஆட்களின் சத்தம் கேட்கிறது, நாய் குரைக்கும் சத்தமும் கேட்கிறது” என்றார். “யானையின் பிளருகிறது” என்றார். அது தூரத்தில் இருந்தாலும் பதட்டபடாமல் எல்லோரும் மேலே ஏற சொல்லி நாங்கள் அனைவரும் ஏறிச் சென்று நித்தியவனத்தில் உள்ள யானைக்குடில் அருகே சென்று சற்று நேரம் அமரலாம் என்று முடிவெடுத்து போகும் வழியில் தவிட்டுக்குருவி (Brown-billed Babbler), சென்று அமர்ந்தப்படி மாங்குயில் (Black-headed Oriole), செம்பிட்டத் தகைவிலான் (Red-rumped Swallow) ஆகிய பறவைகளைப் பார்த்தோம்.
இந்த முறை அமர்கையில் நிசபதம்மே இருந்தது. எல்லா சிறுவர்களும் ஒத்துழைத்தனர். இது மாதிரியான வகுப்புக்கு செல்லும் போது குழந்தைகள் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் மாறுவது இயல்பே. இதை செய் என்று சொல்லாமல் சேர்ந்து செயவது என்பது தான் சிறந்த வழி. சூரியன் மறைவதை, நீல மேகம் செம்மேகமாக மாறும் வரைக்கும் இருந்து அனைவரும் வெவ்வேறு பறவையின் ஓசையைக் கேட்டபடி இருந்தோம்.
வகுப்பில் ஈஸ்வரமூர்த்தி பறவைகளைப் பற்றி எழுதிய பறவைகளுக்காக பல ஆண்டுக்காலம் பயணித்த முன்னோடியான ஆளுமைகளான சலிம் நபியின் ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சிகள்’ – அந்த காலத்தில் பறவைகளைப் பார்ப்பதில் என்ன சவால்கள் இருந்தது, எப்படி பறவைகளைப் ஆவண படுத்தினார்கள் என்று அறிந்து கொள்ள முடியும் , கோவையைச் சேர்ந்த கா. ரத்தினம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் பறவைகளுக்கு பெயர் வைத்து குறிப்பிடத்தக்கது, அவர் எழுதிய சுயசரிதை ‘வலசை போகும் பறவைகள்’ இன்னும் சில ஆளுமைகள் ப.ஜெகநாதன், ரவீந்திரன் நடராஜன் ஆகியோரைப் பற்றி அறிமுகம் செய்தார்.
அடுத்த நாள் காலை 6 மணிக்கு பறவை பார்த்தல். மீண்டும் ஆவலுடன் எதிர்பார்த்த படி இரவு உணவை முடித்துக்கொண்டு கால்வட்ட கிண்ணம் போல நிலவு ஜொலிக்க, நட்சத்திரங்கள் சேர்ந்து மேலும் அழகூட்ட சிறிது நிமிடம் வானத்தைப் பார்த்தபடி இரவு துயில செல்லும் போது மனம் நிறைவாக இருந்தது.
மூன்றாம் நாள்
5.45 மணி, காலை மெல்ல குளிர்க்காற்று உரசிச் செல்ல, பறவைகளின் ஓசைகள் மயிலின் அகவும், கவுதாரியின் சத்தம், காட்டுக் கோழியின் சத்தம் என்று கேட்டபடி சென்றேன். பிளாக் டீயுடன் இரண்டு பிஸ்க்கட்டை விழுங்கிவிட்டு சரியாக 6 மணியளவில் எங்கள் பயணம் அதிலும் குறிப்பாக சிறுவர்கள் உற்சாகத்துடன் கிளம்பியது மேலும் சுவாரஸ்யமாக ஒரு பெரிய கூட்டு குடும்பம் போல பயணித்தோம். புறப்படுவதற்கு முன் கதிர்குருவி (Plain Prinia) பார்த்தோம். நான்கு பேருக்கு ஒரு Binocular என்று பகிர்ந்து கொண்டோம்.
செம்மீசை சின்னான், வெண் புருவ சின்னான் என்று பார்த்தப்படி நடந்தோம். நித்தியவனத்தின் நுழைவாயிலுக்கு முன் வலது பக்கத்தில் அத்தி மரத்தைத் தாண்டி உள்ள புளிய மரத்தின் காய்ந்துபோன கிளையின் உச்சியில் மணிப்புறா எங்களை வேவு பார்த்த படி அமர்ந்திருந்தது.
அங்கிருந்து நேராக வடக்கே சென்றோம். பலா மரத்திற்கு பின்னால் இருக்கும் மரத்தின் உச்சி கிளையில் Yellow-footed Green Pigeon அமர்ந்திருந்தது. இந்த மாதிரி புறாக்கள் மலைப் பகுதியில் அதிகம் காணக் கிடைக்கின்றன. இங்கு சென்னையில் அதிகம் பார்க்க கிடைப்பது மாடப்புறா (Rock Pigeon) வகைகள். காலையில் எழுந்தவுடன் அதிகம் கேட்பது காக்கை கரைவதும், குயிலின் ஓசையும் தான். பல சமயம் குயில் அலறும் சத்தம் தான். பிறகு நடந்து செல்கையில் ஏதாவது குயிலின் ஓசை கேட்டால் எந்த மரத்திலிருந்து ஓசை வருகிறது என்று பார்ப்பது பழக்கமாகி வருகிறது. சில நிமிடங்கள் மரத்தை உற்று நோக்கிய பிறகு வழியில் செல்லும் மக்கள் ஒரு மாதிரியாக பார்த்து சென்றனர். நான் எனக்குள்ளே நினைத்து சிரித்தப்படி நடந்தேன்.
புறாவைப் பார்த்து விட்டு பிறகு Coppersmith Barbet என்ற செம்மார்பு குக்குறுவான் அதே கிளையில் வந்து அமர்ந்தது. அதற்கு பிறகு பனங்காடை (Indian Roller) நிறைய மணிப்புறாக்கள் வந்து அமர்வது– பறப்பதுமாக இருந்தது. வெயில் அதிகமானதால் திரும்பி யானைக்குடில் அருகே சென்றால் அங்கே அரிதாக துடுப்பு வால் கரிச்சான் (Racket-tailed Drongo) அமைதியாக இருந்தால் பார்க்க கிடைக்கும் என்றார் ஈஸ்வரமூர்த்தி. போகும் வழியில் செண்பகம் இரையய் கவ்விக்கொண்டு வழியின் குறுக்கே பறந்து சென்றதை பார்க்க முடிந்தது. இந்த முறை சிறுவர்கள் மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். காலைப் பனி புல்லின் இலையில் படிந்தப் படி இருந்தன. தரையில் ஈரப்பதம் இருந்தது.
யானைக்குடிலிக்கு பின்னால் உள்ள மின்சாரக் கம்பில் செம்முதுகுத் தகைவிலான் மிகச் சிறிய (Red-rumped Swallow) வான்வெளிப் பறவைகளில் ஒன்று, நீளமான வால், சிட்டுக்குருவி அளவு, கருப்பு அலகு மற்றும் இறக்கை, தொண்டை வயிறு பகுதி வெள்ளை நிறம், நீண்ட வாளுக்கும், இறக்கைக்கும் நடுவே சிவப்பு நிறம் பட்டை போல binocularல் பார்ப்பதற்கு தெளிவாக தெரிந்தது. Common Iora, Black-hooded Oriole, நிலக்கண்ணி, மடையான், Kingfisher, Black-headed Cuckoo, Plum- headed Parakeet என்று எங்களை சுற்றி பல வகை பறவைகளை பார்க்க முடிந்தது.
ஈஸ்வரமூர்த்தி Shikra ஒன்று ஓணான்னைக் கவ்விக் கொண்டு பறந்து செல்வதை காட்டினார். அதை தொடர்ந்து கிரிச்சான் துரத்த Shikra மேலும் கீழும் திசைத் திருப்பி பறக்க நான் நினைத்தேன் ”பருந்துக்கு காலை உணவு தயார் ஆனால் ஓணான் என்ன நினைத்திருக்கக் கூடும் காலையில் கண் விழிக்கும் போது” என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன். 45 நிமிடம் சென்றதே தெரியாமல் அமர்ந்திருந்தோம். திரும்பி வரும் வழியில் சிறிய பஞ்சுருட்டான் (Green Bee Eater) பார்த்தேன். காலையில் மட்டும் பார்த்தது 28 பறவைகளுக்கு மேல் இருக்கும்.
பறவைகளைப் பற்றி மூன்று நாட்கள் வாழ்நாளில் செலவிட முடியவில்லையென்றால் அது மிக பெரும் இழப்பே என்று நினைக்கிறேன். நேரடியாக நாம் பறவைகளைப் பற்றி தெரிந்து கொள்கிறோம் என்பது ஒன்று. இந்த அனுபவம் வாழ்க்கையில் நீங்கள் எதிர்காலத்தில் எடுக்க போகும் எந்த முடிவுக்கும் ஏதோ ஒரு விதத்தில் உதவுகிறது என்றால் நம்புவீர்களா?
வெள்ளிமலையிலுருந்து சென்னைக்கு என் பைக்கில் கிளம்பினேன். வரும் வழியில் டீ பிரேக்குடன் இப்போது பறவை பார்ப்பதும் சேர்ந்து கொண்டது.
நன்றியுடன் சர்வா.