அன்புள்ள ஜெ
காணொளி உலகில் ஏன் வாசிக்கவேண்டும் என்ற காணொளியை நான் நாலைந்து நண்பர்களுக்கு அனுப்பினேன். ‘அதையும் காணொளியாத்தானே குடுக்கறார்?’ என்ற வகையான எதிர்வினைகள் வந்தன. காணொளியில் மூழ்கிக்கிடப்பவர்களிடம் அது போதாது, வாசிக்கவேண்டும் என்று எப்படித்தாந் சொல்லமுடியும், அதை எழுதினால் நீங்கள் வாசிக்க மாட்டீர்களே என்று நான் பதில் சொன்னேன். அந்தப்பதிலைக்கூட அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘காணொளி தீமைங்கிறதும் காணொளியாகவே கிடைக்குது’ என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் சலித்துவிட்டேன்.
ஆனால் நானே ஓராண்டு முன்பு வரைக்கும் இதையே சொல்லிக்கொண்டிருந்தவன் தான். நான் ஒரு டெக்னோகிராட் என்று சொல்லிக்கொண்டேன். ஆகவே எதையும் வாசிக்கவேண்டியதில்லை. ஒரு காணொளி அல்லது கிராஃப் போதுமானது, நான் விஷயங்களை புரிந்துகொள்வேன், மொழி என்பதே அவுட் டேட்டட் ஆன ஒரு தொடர்பு ஊடகம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். டெக்குகளாகிய நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொள்ள 1000 வார்த்தையே போதுமானதாக இருந்தது. ஒரு சாதாரணமான கிராப் அல்லது ஒரு மாடல் போதுமானதாக இருந்தது.
ஆனால் ஐரோப்பிய நிபுணர் ஒருவருடன் பேசி வேலைசெய்யவேண்டியிருந்தது. அவருடைய ஞானமும், மொழிவல்லமையும் அபாரமாக இருந்தது. எந்த ஒரு கருத்தையும் கச்சிதமாக ஆங்கிலத்தில் சொன்னார். (அவருடைய தாய்மொழி ஆங்கிலம் இலலை) நல்ல உவமைகளைச் சொன்னார். எந்த உரையாடலிலும் மெல்லிய நகைச்சுவையையும் சேர்த்துக்கொண்டார். அவருடன் பேசும்போதுதான் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது. என்னுடைய லிமிட்டேஷன்ஸ் என்ன என்று தெரிந்தது. என்னால் சீராக மொழியில் எதையும் சொல்ல முடியவில்லை. அதாவது அப்ஜெக்டிவிட்டி என்பதே இல்லை. எங்களுக்குள் பேசிக்கொள்ள மட்டும்தான் என்னால் முடியும் என்று தெரிந்தது. அந்த ஐரோப்பியர் பேசிய பல விஷயங்கள் எனக்கு பிடிகிடைக்கவில்லை. நிறைய ஜோக்குகள் புரியவில்லை. மற்ற ஐரோப்பியர் சிரித்தார்கள்.
அவரிடம் பேசும்போதுதான் அவர் மிகச்சிறந்த வாசகர் என்று தெரிந்தது. நான் வாசிக்காததனால்தான் அவ்வளவு பின்னடைந்திருக்கிறேன் என்று புரிந்துகொண்டேன். வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க ஆரம்பித்த ஓராண்டிலேயே காணொளிகளிலும் சினிமாக்களிலும் மூழ்கியிருப்பவர்கள் பின்தங்கியவர்கள் அல்ல, மழுமட்டைகள், முழுமூடர்கள் என்று தெரிந்தது. எப்படி ஒன்றுமே தெரியாமல் ஒரு அசட்டு உலகில் 35 வயது வரை வாழ்ந்துவிட்டோம் என்று அறிந்துகொண்டேன். மிகமிக வருத்தமான விஷயம் அது.
இன்றைக்கு என் நண்பர்களிடம் வாசிப்பதற்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். வாசிப்பதற்கான மெட்டீரியல்களை அனுப்புகிறேன். பெரும்பாலும் வாசிபதில்லை. என்ன அதன் கண்டெண்ட் என்று நியே சொல்லிவிடு என்பார்கள். ஆனாலும் நான் அனுப்பிக்கொண்டேதான் இருக்கிறேன். ஒருவர் வாசித்தால்கூட அவருக்கு நல்லதுதானே?
ஜே.எம்.கிருஷ்ணன்