அன்புள்ள ஜெ
உங்கள் காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இந்த கார்ப்பரேட் உலகில் இந்தவகையான செய்திகளுக்கு மிகப்பெரிய இடம் உள்ளது. கார்ப்பரேட் சூழலில் இதற்கிணையான ‘சுய ஊக்கச் சொற்பொழிவுகள்’ நிறையவே நடக்கும். ஊழியர்களுக்கு ஊக்கம், செயல்திறமை ஆகியவற்றை அளிப்பதற்கான பயிற்சிகள் ஏராளமாகவே உண்டு. அவற்றை அளிக்கும் நிபுணர்களும் பலர் உள்ளனர். அவர்கள் பல லட்சம் சம்பாதிப்பவர்கள்.
அவர்கள் அளிக்கும் செய்தியின் சாராம்சம் என்பது இன்னும் கடுமையாக உழைப்பது எப்படி, இன்னும் தொழிலில் முன்னேறுவது எப்படி, தொழிலில் உள்ள சோர்வுகளை எப்படி களைவது என்று மட்டும்தான். ஆனால் ஒட்டுமொத்த வாழ்க்கையை எவரும் கருத்தில்கொள்வதே இல்லை. உண்மையில் அவர்கள் அளிக்கும் அறிவுரைகள் எல்லாமே எப்படி நம்மை மேலும் சிறந்த அடிமைகளாக ஆக்கமுடியும் என்பதைப் பற்றித்தான்.
இச்சூழலில் உங்களைப் போன்ற மிகச்சிலர்தான் ஒத்திசைவும் முழுமையும் உள்ள ஒரு வாழ்க்கைக்கான ஆற்றுப்படுத்தல்களை அளிக்கிறீர்கள். வெறுமே சொல்லாமல் அதற்கான வழிகளை காட்டுகிறீர்கள். நம்மால் முடியும் என்னும் நம்பிக்கையையும் அளிக்கிறீர்கள்.
நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பது ஒரே விஷயம்தான். வாழ்க்கையில் ஒரு கிரியேட்டிவ் ஆன பகுதி தேவை, அதுவும் சேர்ந்தால்தான் வாழ்க்கை முழுமையடையும் என்பதுதான் அது. அதன் வெவ்வேறு facet களைச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.
ஒரு வீடியோ கேட்டால் நாம் அதை ‘சரிதான், ஆனால் ‘ என்று கடந்துபோய்விடுவோம். ஆனால் கேட்கக்கேட்க நம் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அதைநோக்கி மாற ஆரம்பித்துவிடுகிறது. என் வாழ்க்கையில் இந்த வீடியோக்கள் மிகப்பெரிய மாற்றங்களை அளித்துள்ளன. நன்றி.
கிருத்திகேஸ்வரி மாணிக்கவாசகம்