இந்திய தத்துவ அறிமுக முதல்நிலை முகாம் மீண்டும் ஏன்?

தத்துவ வகுப்புக்கு வந்து கற்றுச்சென்ற பலரும் தவறாமல் எழுதிய வரி, அது அவர்கள் எண்ணியதுபோல் இருக்கவில்லை என்பது. தத்துவக் கல்வி என்பது ஒருவகையான வறண்ட தர்க்கப் பயிற்சியாகவும், தகவல்களை நினைவில் கொள்ளவேண்டிய ஒன்றாகவும் அமையுமென நினைத்திருந்தனர். அவ்வாறல்ல என தெரிந்தது. அது திகைப்பூட்டும் ஓர் அனுபவமாக அமைந்தது என்றனர்.

இந்திய தத்துவத்திற்கான வகுப்புகள் இதுவரை ஏழு நடந்துவிட்டன. ஐந்து முதல்நிலை வகுப்புகள், இரு இரண்டாம்நிலை வகுப்புகள். மேலும் ஒரு தொடக்க வகுப்பை நடத்திவிட்டு இரண்டாம் நிலை வகுப்பு ஒன்றை நடத்தலாமென்றும், அதன் பின் மூன்றாம்நிலை வகுப்புக்குச் செல்லலாம் என்றும் எண்ணம் எழுந்தது. பலர் கோரியமையால்.

இப்பயிற்சிகள் ஒரு தத்துவ நூலை பயில்வது போன்றவை அல்ல. தத்துவம் சார்ந்த தகவல்களும் சிந்தனைகளுமல்ல அல்ல இவ்வகை வகுப்புகளில் கற்பிக்கப்படவேண்டியவை. முதலில் கற்பிக்கப்படவேண்டியது ’தத்துவப்படுத்தல்’ எனும் சிந்தனைப் பயிற்சிதான்.

நாம் சிந்திப்பது இரண்டுவகையில். ஒன்று எளிய அன்றாடத் தர்க்கம் சார்ந்து. இரண்டு உணர்ச்சிகளின் தொடராக. இரண்டுக்கும் அப்பாலுள்ளது தத்துவசிந்தனை. அது மையமும் அதைச்சார்ந்த ஒழுங்கும் கொண்ட ஒன்று. சிந்தனையை வைத்து விளையாடுவது அல்ல. அது ஒருவகை மலையேற்றம். அதை பயிலத்தான் வேண்டும். இயல்பாக நம்மில் நிகழும் சிந்தனைமுறையை ரத்துசெய்து தத்துவார்த்தமாகச் சிந்தனைசெய்ய பயிற்சி எடுக்கவேண்டும். முதலில் என்ன அது என தெரிந்தால்தான் பயிற்சிக்குச் செல்லமுடியும்.

தத்துவ வகுப்புகள் தத்துவத்தை மட்டும் கற்பிப்பவை அல்ல. அவை சிந்தனைசெய்ய கற்பிக்கின்றன. பொதுவாகவே நாம் சிந்திப்பதும் பேசுவதும் கூர்மையாகிவிடுகிறது. நம் பார்வைகள் மாறத்தொடங்குகின்றன. தத்துவம் அளிக்கும் கொடை என்பது அதுதான்.

இந்திய தத்துவம் என்பது இந்திய ஆன்மிகம், மதம், கலைகள், இலக்கியங்கள் ஆகியவற்றுக்கு ஆதாரமானது. நாம் நம்மையறியாமலேயே புழங்கும் பல தளங்களுண்டு. பக்தி, சோதிடம், வாஸ்து, ஆசாரங்கள். அனைத்துக்கும் அடிப்படை இந்திய தத்துவப்பரப்பே. அதை அறிவதென்பது நம்மை நாமே அறிவது. நாம் ஏற்கனவே அறிந்தவை எல்லாம் தத்துவக் கல்வியுடன் இணைகையில் புதிய ஒளி கொள்வதைக் காணலாம்.

மேலைச்சிந்தனைகளே இன்று நமக்கு அறிவியலாக, தொழில்நுட்பமாக, அரசியலாக, சமூகவியலாக வந்துகொண்டிருக்கின்றன. நாமடைந்த கல்வி முழுக்க முழுக்க மேலைத்தத்துவத்தின் அடிப்படை கொண்டது. அதில் விடுபடுவது இந்தியதத்துவ சிந்தனைகளின் தரப்பே. அதை இப்படி மாற்று அமைப்புகள் வழியாகவே முறையாகக் கற்கமுடியும்.

முந்தைய கட்டுரைதியானம் -உளக்குவிதல் பயிற்சி
அடுத்த கட்டுரைபுதிய புல்வெளிகள்…