சிந்தனையின் எதிரிகள்

அன்புள்ள ஜெயமோகன்

நான் புதியதாக படிக்க ஆரம்பித்திருக்கும் வாசகன். கல்லூரி மாணவனாக இருக்கிறேன். உங்களுடைய ஆனந்தவிகடன் பேட்டியை வாசித்தேன். மிகச்சிறந்த பேட்டியாக இருந்தது. அதில் நீங்கள் சொன்ன விஷயங்கள் எல்லாமே யோசிக்கவேண்டியவை. ஆனால் அதைப்பற்றிய கருத்துக்கள் எல்லாமே கடுமையான வசைகளாக இருந்தன. கீழ்த்தரமான நிலையிலே அமைந்திருந்தன. இந்த மாதிரியான வசைகள் ஏன் வருகின்றன? ஒரு கருத்து ஏன் இப்படி இவர்களால் வசைபாடப்படுகிறது. இது இங்கே ஏதாவது சிந்தனை செய்வதற்கு பயத்தை உருவாக்குவதாக உள்ளது. இவ்வளவு அசிங்கமான சூழலிலா நாம் இருக்கிறோம் என்ற எண்ணம் வருகிறது. இங்கே எப்படிச் சிந்தனை செய்வது என்ற பயம் உண்டாகிறது.

ஆதிரன் 

அன்புள்ள ஆதிரன்,

இந்த வசைபாடும் கூட்டம் என்பது அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட ஒன்று. தெருக்களில் கல்லை வீசிக் கொண்டும் கெட்டவார்த்தை பேசிக்கொண்டும் போகும் கும்பலைப் பார்த்திருப்போம். அதில் ஒரு சிறுபகுதி இப்போது இணையத்திலும் வந்திருக்கிறது. இவர்களுக்கும் சிந்தனைகளுக்கும் சம்பந்தமில்லை. இவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். இங்கே சிந்தனைகளை வாசிக்கவும் விவாதிக்கவும் வாசகர்கள் உள்ளனர். அவர்களை மட்டும் பொருட்படுத்தினால் போதும். இந்தக்கூட்டம் எங்கேயும் உண்டு. இணையம் இவர்களை கொஞ்சம் பெரிதாக்கிக் காட்டுகிறது, அவ்வளவுதான். அந்தப் பேட்டியிலேயே இவர்கள் உருவாக்கும் நெருக்கடி இங்கே இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஆனால் சிந்தனை என்பது இதைப்போன்ற நெருக்கடிகளைக் கடந்துதானே உருவாக முடியும்?

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைவாசிப்பின் வழிமுறைகள், கடிதம்