அன்புள்ள ஜெ
வாசிப்பின் வழிமுறைகள் பற்றிய உரை மிக முக்கியமான ஒன்று. நான் அதைப்பற்றி ஒருவரிடம் பேசினேன். அப்படியெல்லாம் தேவையே இல்லை, சும்மாவே வாசிக்கலாம், வாசிப்பது என்ன பெரிய கம்பசூத்திரமா என்றெல்லாம் பேசினார். அவர் ஒரு கவிஞர். நான் அவரிடம் அவர் அண்மையில் என்னென்ன வாசித்தார் என்று கேட்டேன். ஒவ்வொன்றாக கேட்டல் எதுவுமே வாசிக்கவில்லை. வாசிக்கும் வழக்கமே இல்லை. வாசிப்பதெல்லாமே முகநூலில் 200 வார்த்தை வாசிப்பது மட்டும்தான். அதைத்தான் வாசிப்பு என நினைத்து வைத்திருக்கிறார். நான் சொன்னேன். இந்த உரையை அளித்திருப்பவர் மகத்தான வாசகர். அதனால் எனக்கு அது முக்கியம் என்று சொன்னேன். அவரைப்போன்ற கும்பல் இன்றைக்கு வாசிப்பு அவசியமே இல்லை என்று பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழிலே இந்த விஷயம் எப்போதும் எடுபடும். அறிவுக்கு எதிராக எது சொன்னாலும் அதை ரசித்து வரவேற்பார்கள். அறிவுஜீவி என்று காட்டிக்கொண்டு ஒருவர் அப்படிச் சொன்னால் இன்னும் வரவேற்பு இருக்கும். இன்னும் படிக்கவேண்டும் என்றோ இன்னும் தெளிவடையவேண்டும் என்றோ எவராவது சொன்னால் கடித்துக் குதற வருவார்கள். வாசிப்பு மிகமிகக் குறைகிறது என்பது ஓர் உண்மை. அதை மேம்படுத்துவதற்கான நடைமுறை வழிகளைச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
ஆர். செந்தில்ராஜ்