வாழ்வின் மீதான நம்பிக்கை , கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களே,

உங்கள் காணொளிகளை தவறாமல் ரசித்து வரும் நான்  “மனிதகுலம்ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறுஎன்ற புத்தகத்தின் உங்கள் இன்றைய காணொளியையும் அவ்வாறே பார்க்க நேர்ந்தது

ஆனால் ஒரு சிறு வித்தியாசம்இன்றுடன் நான் கடந்த சில வாரங்களாக படித்து வரும்நீங்கள் சிலாகித்து பேசக்கூடிய ரஷ்ய நாவல்களில் ஒன்றுமானகுற்றமும் தண்டனையும்” ( மற்றுமொன்றுஅன்னா கிரனினா“) படித்து முடித்து அடுத்து எதைத் தொடங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது சரியான என் அடுத்த புத்தகத்தை முடிவு செய்யும் வகையில் உங்கள் இன்றைய காணொளி அமைந்தது. அதற்கு என் முதற்கண் நன்றி.

நான் புரிந்துகொண்ட வரையில் நீங்கள் ரஷ்ய எழுத்தாளர்கள் மேல் அதீத ஆர்வம் மற்றும் அன்பும் கொண்டவராகவும், மேலைநாட்டு எழுத்தாளர்கள் எதிர்மறை சிந்தனைகளை விதைப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது உங்கள் விமர்சனமாக இருக்கிறது

அதற்கிணங்க இன்றைய காணொளியில் நீங்கள் யுவல் நோவா ஹராரி (சேப்பியன்ஸ்), டாக்கின்ஸ் (selfish genes), டார்வின், சிக்மண்ட் பிராய்ட் போன்றவர்கள் எவ்வாறு எதிர்மறை சிந்தனைகளை விதைத்து அதன் மூலம் புகழ் அடைகிறார்கள் என்ற தொணியில் நான் இன்றைய உங்கள் காணொளியைப் புரிந்துகொண்டேன்.

அப்படிப் பார்த்தால்குற்றமும் தண்டனையும்மற்றும்அன்னா கிரனினாபோன்ற உங்களால் கொண்டாடப்படும் நாவல்கள் கூடதுன்பியல் மற்றும் மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டம்போன்ற எதிர்மறை சிந்தனைகள் பற்றியதாகவே இருப்பதாக எனக்குப் படுகிறது.

அப்படியென்றால் என் போன்ற உங்கள் வாசகர்கள் உங்கள் இருவேறுபட்ட அணுகுமுறைகளை உங்களின்பரிணாம வளர்ச்சிஎன்று எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அல்லதுகுற்றமும் தண்டனையும் மற்றும் அன்னா கிரனினாபோன்ற நாவல்களின்பால் என் அணுகுமுறை தவறா? என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். அது என் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று உறுதியாக எண்ணுகிறேன்.

உங்கள் பதிலை எதிர்நோக்கும்,

ராமு 

சென்னை 

அன்புள்ள ராமு

தீமையின் பெரும் சித்திரத்தை அளிக்காத பேரிலக்கியம் இல்லை. ராமாயணம், மகாபராதம், இலியட், ஒடிஸி எல்லாமே தீமையைச் சித்தரிப்பவை. ஏனென்றால் மானுட இயல்பில் உள்ள தீமையைத்தான் அவை முதன்மையாகக் கவனிக்கும். அவற்றுடன் போராடும் பொருட்டே உண்மையில் இலக்கியங்கள் எழுதப்படுகின்றன. அவற்றை வென்று கடக்கும் வழிகளைப்பற்றியே அவை பேசுகின்றன. ஆனால் அவற்றின் மையத்தரிசனம் என்பது தீமையின் மீதான நன்மையின்  வெற்றியாகவே இருக்கும்.

பழைய இலக்கியங்களில் நன்மையின் வடிவமான கதைநாயகனின் வெற்றியாக அவை காட்டப்பட்டிருக்கும். நன்மை தெய்வீக சக்தியாகவும், தீமையை  அது வெல்வதாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். நவீன இலக்கியம் உருவானபோது அந்த கதைநாயகனின் உள்ளமே நன்மையும் தீமையும் மோதும் களமாக ஆகியது. தஸ்ல்தோய், தஸ்தயேவ்ஸ்கி , தாமஸ் மன் என பெரும்படைப்பாளிகளின் ஆக்கங்களில் உள்ள சித்தரிப்பு அத்தகையது. தனக்குள் உள்ள தீமையை, இருட்டை அக்கதைமாந்தர் எப்படி போராடி வெல்கிறார்கள் என்பதே அவற்றை பேரிலக்கியமாக ஆக்குகிறது.

குற்றமும் தண்டனையும் (ரஸ்கால்நிகாப்) புத்துயிர்ப்பு (நெஃல்யுடோவ்) போன்றவர்கள் அதற்குச் சிறந்த உதாரணங்கள். இந்நூல்களும் அறுதியாக நன்மை அடையும் வெற்றியையே சித்தரிக்கின்றன. அந்த வெற்றி ஓர் ஆத்மாவுக்குள் நிக்ழகிறது. மன்னிப்பினூடாக, கழுவாயினூடாக, தியாகத்தினூடாக தீமையின்மேல் நன்மை அடையும் வெற்றியையே அவை காட்டுகின்றன.

அரிதாகச் சில படைப்புகள் தீமையை மட்டுமே காட்டி நின்றுவிடுவதுண்டு. அவை தீமையை இயல்பாக ஆக்குவதில்லை, தீமையே உண்மை என காட்டுவதில்லை, மாறாக தீமையைச் சித்தரிக்கும் விதம் வழியாக அவை நன்மையை நோக்கி வாசகனை செலுத்துகின்றன.

ஜெ

முந்தைய கட்டுரைஎவர் தேவை?
அடுத்த கட்டுரைஇலக்கியமும் கல்வியும், கடிதம்