அன்புள்ள ஜெ,
பறவை பார்த்தல், தாவரங்களை அவதானித்தல் பற்றிய குறிப்பான உரையை என் குழந்தைகளுக்கு அனுப்பி வைத்தேன். வழக்கம்போல அவர்கள் முதல் இரண்டு நிமிடம் மட்டும் பார்த்தார்கள். போர் என்று சின்னவன் சொல்லிவிட்டான். கண்டெண்டை தெரிஞ்சுக்கிட்டேன் என்று இன்னொருவன் சொன்னான். என்ன கண்டெண்ட் என்று கேட்டேன். அவர் பேர்வாட்சிங் கிளாஸ் நடத்துறார், அதுக்கு கேன்வாஸ் பண்றார் என்றான். அவ்வளவுதான். அந்த ஐடியாவைச் சொல்ல முயற்சி செய்தேன். ‘தெரியும்’ என்றார்கள். ‘நேச்சர் வாச்சிங் ஒரு பழைய ஐடியா’ என்றார்கள். ‘நேச்சரை இப்ப வீடியோவிலேயே பாக்கலாம். அட்டன்பரோ காட்டாததா நம்ம காட்டிலே இருக்கு?’ என்றான் பெரியவன். ஒன்றுமே பேசமுடியவில்லை. இருவருமே டிஜிடல் அடிக்ட்கள். சோஷியல் மீடியா அடிக்டுகள். நான் செய்ய ஒன்றுமில்லை. நான் எதையும் இவர்களுக்குக் கற்பிக்க முடியாது. எந்த ஒரு கட்டுரையையும் படிக்க முடியாது. உரைகளைக் கேட்கமுடியாது. எப்போதுமே டிஜிடல் விளையாட்டுதான். இந்த தலைமுறை இப்படி ஆகிவிட்டது. நாம் தனியாகப் போராட முடியாது. நம் சூழல் அப்படி இருக்கிறது. நாம் கூடவே மிதக்கவேண்டியதுதான்.
ஆர்