அன்பிற்குரிய ஜெ அவர்களுக்கு,
இரண்டாம் நிலை யோக பயிற்சி கடந்த வாரம் கலந்துகொண்டேன். முதல் நிலை பயிற்சிகளை விட்டு விட்டு செய்து கொண்டிருந்தேன். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். அதனுடன் இந்த புதிய பயிற்சிகளை செய்து வருவது மிகுந்த அமைதியையும் உளக்குவிப்பையும் கொடுக்கிறது.
சைதன்ய சுவரூப தியானம் இந்த அளவிற்கு சிறப்பாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த ஐந்து நாட்களாக வேலையிலும் வாசிப்பிலும் வெகு நாட்களாக செய்யாமல் இருந்த பல வேலைகள் நேர்த்தியாகவும் முழு ஈடுபாட்டுடனும் செய்து வருகிறேன். தன்னம்பிக்கை அதிகம் ஆனதை போல் உணர்கிறேன், முழு மனதுடன் செய்யும் செயலில் தன்னம்பிக்கை நிச்சயம் கூடும் என தெரிகிறது. வாழ்க்கை இனிமையாக ஆனதை போல் உணர்கிறேன்.
உங்களுக்கும் குரு தில்லை செந்தில் பிரபு அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
இப்படிக்கு,
அருண் ஆனந்த்
அன்புள்ள அருண்,
யோகம் தியானம் போன்றவற்றின் சிக்கல் என்னவென்றால் அவற்றை தொடர்ச்சியாகச் செய்பவர்கள் அடையும் பயன்களை அவற்றை செய்யாதவர்களுக்கு புரியவைக்கவே முடியாது என்பதுதான். அவர்களுக்கு அவை மிகையாக, விருப்பக்கற்பனையாகவே தோன்றும். மனமும் உடலும் ஒன்றே என உணர்ந்தவர்களுக்கு அதன் தர்க்கம் புரியும்.
ஜெ