எழுத்தும் சோர்வும், கடிதம்

அன்புள்ள ஜெ

உங்கள் காணொளியில் எழுத்து என்பது உளச்சோர்வுகளில் இருந்து விடுபடுவதற்கான வழி என்று சொல்லியிருந்தீர்கள். நான் உளச்சோர்வுக்கு மருந்தாக, டாக்டர் சொன்னபடி, நிறைய எழுதுபவள். அது எனக்கு உதவுகிறது. ஆனால் அதைப் பிரசுரிப்பதும் மற்றவர்கள் படிப்பதும் நல்ல விஷயம் அல்ல என்று தோன்றுகிறது. அது இன்னும் உளச்சோர்வைத்தானே அளிக்கும்?

எம்

அன்புள்ள எம்,

உளச்சோர்வுக்காக டாக்டர்கள் எழுதச்சொல்லும்போது உங்கள் மனதை நேரிடையாக எழுதச் சொல்கிறார்கள். உங்கள் உள்ள ஓட்டங்களை நீங்கள் ‘அப்படியே’ எழுதுகிறீர்கள். அதை டாக்டர் மட்டுமே பார்க்கவேண்டும். அதை வேறு எவரும் பார்க்கமுடியாது, கூடாது.

ஆனால் இலக்கியம் அப்படியே ஒருவர் தன் உள்ளத்தை எழுதுவது அல்ல. அது ‘இன்னொருவரின் கதையை’ எழுதுவதுதான். அந்த இன்னொருவரில் எழுதுபவரின் உள்ளம் மறைமுகமாக வெளிப்படுகிறது. அது எப்படி வெளிப்படுகிறது என்பது எழுதுபவருக்குத்தான் தெரியும். ஆகவே எவரும் எழுதுபவரைக் கண்டுபிடிக்கமுடியாது. அப்படிக் கண்டுபிடிக்கமுடியாதபடி இன்னொரு கதாபாத்திரத்தில் ‘ஒளிந்துகொண்டு’தான் எழுதவேண்டும். தன்னை பல கதாபாத்திரங்களாக சிதறடித்துக்கொள்ளுவதும் உண்டு.

உண்மையில் டாக்டர் அந்தரங்கமாக, நேரடியாக எழுதச்சொல்லும்போதுகூட நாம் நேரடியாக எழுதுவதில்லை. அப்படி எழுத நம்மால் முடியாது. நாம் அங்கே புனைவுதான் செய்கிறோம். கொஞ்சம் உண்மை, கொஞ்சம் புனைவு. அதுதான் அந்தக்குறிப்புகளில் இருக்கும். நம்மை நாம் நியாயப்படுத்துவோம். நம்மை ஒரு குறிப்பிட்ட வகையாகக் காட்டிக்கொள்ள முயல்வோம். அதற்காகப் புனைவை சேர்த்துக்கொள்வோம்.

ஆகவே நேரடியாக எழுதும்போது அதில் புனைவைக் கலப்போம். ஏனென்றால் அங்கே நம்மை நாம் மறைத்துக் கொள்ளவேண்டும். நம்மை எவரும் தப்பாக நினைக்கக்கூடாது என நினைப்போம். ஆனால் புனைவு எழுதும்போது அது நம் வாழ்க்கை இல்லை என்று நாம் சொல்லிவிட்டமையால் அதில் நாம் துணிந்து உண்மையை எழுதுவோம்.

உளச்சோர்வுக்கு பல காரணங்களில் ஒன்று நம்மை நாமே உண்மையாக வெளிப்படுத்தாமல் இருப்பது. நேரடியாக உணர்ச்சிகளை எழுத ஆரம்பித்தால் நாம் நம்மைப்பற்றியே பொய் சொல்வோம். நம்மை நியாயப்படுத்துவோம், அதற்காக நம் கஷ்டங்களை மிகையாக்குவோம், நம்மை தன்னிரக்கத்தில் மூழ்கடிப்போம். ஆனால் புனைவை எழுதினால் நாம் உண்மையை வெளிப்படுத்தி மீண்டுவிடுவோம்.

ஜெ

 

முந்தைய கட்டுரைஇயற்கையின் நடுவே