அன்புள்ள ஜெ
நான் உங்கள் காணொளி ஒன்றைப் பார்த்து உண்மையில் அதிர்ச்சி அடைந்தேன். ஆதித்த கரிகாலன் பிராமணர்களால் கொலைசெய்யப்பட்டார் என்று இங்கே அரைநூற்றாண்டாக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். அண்மையில் பொன்னியின் செல்வன் வெளிவந்தபோது அந்தப்பிரச்சாரம் உச்சம் அடைந்தது.
ஆனால் உண்மையில் கல்வெட்டில் இருப்பது பிரமாணிமார் என்னும் வார்த்தை. அது பிராமணர்களைக் குறிப்பது அல்ல. குழுத்தலைவர்கள், முன்னிலையினர் என்னும் அர்த்தம் மட்டுமே அதற்கு உண்டு.சோழர்காலத்தில் மதக்குழுக்களின் தலைமையை பிரமாணி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. அன்று தமிழகத்தில் பாசுபதர்கள் போன்ற மதக்குழுக்கள் ஆயுதம்தாங்கியவர்களாக இருந்தார்கள்.
சோழர்களின் வரலாறு முழுக்க அந்த சைவ மதக்குழுக்களுக்கும் ஆகமமரபுக்குமான பூசல்கள் நடந்துகொண்டே இருந்தன. ராஜராஜன் ஆட்சிக்கு வந்ததும் அவர்களை வேருடன் அழித்தார். அந்த பின்னணியில் பிரமாணிமார என்பது எதைக்குறிக்கிறது என்பதில் ஐயமே இல்லை. குடவாயில் பாலசுப்ரமணியம் போன்றவர்கள் இதையெல்லாம் விரிவாக எழுதியுமுள்ளனர்.
ஆனால் இதை நீங்கள் சொல்லிய இந்த காணொளியை மூவாயிரம்பேர் கூட பார்க்கவில்லை. ஆனால் இங்கே தமிழ்த்தேசியம் பேசும் முட்டாள்கள் பேசும் அபத்தமான ‘வரலாற்று’ செய்திகளை பல லட்சம்பேர் பார்க்கிறார்கள். இதை அவர்கள் பார்ப்பார்கள், கொதிப்பார்கள் என நினைத்தேன். ஆனால் எவருமே பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் உண்மை அனைவருக்கும் தெரியும். அவர்கள் விரும்புவது அவதூறு மட்டும்தான்.
ரா. மகாதேவன்