அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வைணவ வகுப்பிற்கு நான் என் தோழி ஈஸ்வரியுடன் கலந்துகொண்டேன். ப்ரபந்த வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம், பின்வரும் பாடலின் பொருளை ராஜகோபாலன்(ஜாஜா) அவர்களின் காணொளியை கண்டது முதல் தோன்றியது.
மழையே மழையே மண் புறம் பூசி உள்ளாய் நின்ற
மெழுகு ஊற்றினால் போல ஊற்று நல் வேங்கடத்துள் நின்ற
அழகர் பிரானார் தம்மை என் நெஞ்சத்து அகப்பட
தழுவ நின்று என்னை தகர்த்தி கொண்டு ஊற்றவும் வல்லையே ?
‘என்னை தகர்த்தி கொண்டு’ எத்துணை ஆழமான வரிகள்.
பாடல்களில் மறைந்துள்ள பொருள், ஆசிரியர் விளக்கும்போது மனதில் திரை விலகினார் போல் இருந்தது. எ.க :- ‘உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்’.
இதில் உறி வீட்டில் எப்பகுதியில் இருக்கும், அதுபோல் மனதில் உள்ள நான்/என்னுடைய என்னும் ‘உறி’ உள்ளே மறைந்தே இருக்கும். கடைசி வரியில் ‘அறிவு அழிந்தனர்’ எனும் பொருளில் நம் அறிவும் அழிந்து மனம் கலந்துவிடுகிறது இறைவனது பேரன்பில்.
மற்றொரு பாடலில் ‘உலகு அளந்த மாயனை காணில் தலைமறியும்’ சுற்றும் நம் தலையின் அளவையும் அவன் காலால் அளக்கபட்ட உலகின் அளவையும் ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.
அப்படிப்பட்டவனை ‘என் சிறு குட்டன்’ என்று கொஞ்சியும், ‘நப்பினை காணில் சிரிக்கும்’ என்று கேலி செய்தும், ‘பின்னும் ஆளும் செய்வன்’ என்று உரிமை பாராட்டியும், பிரபந்தத்தை அதை அறிவோர்க்கு இன்பம் தந்துள்ள ஆழ்வார்களின் சிறப்பே சிறப்பு. அதை உலகிற்கு கண்டெடுத்த நாதமுனிகளின் பங்கும் அளப்பறியது.
ஆழ்வார்களின் கதைகளும், பக்தியும் வியப்பில் ஆழ்த்தியது. ‘உன்னை கொண்டு என்னுள் வைத்தேன், என்னையும் உன்னில் இட்டேன்’ நினைத்து உணரும் தோறும் அருளும் வரிகள்.
பாடல்களின் பொருளை உணரும் வண்ணம் பொறுமையாய், தெளிவாய் விளக்கி, வைணவம் பற்றிய பற்பல தகவல்களை அறியசெய்த ஜாஜா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
இவ்வகுப்பு அமைய காரணமாய் இருந்த தங்களுக்கு நன்றிகள் பல.
இப்படிக்கு
ப்ரீத்தி