தத்துவமும் சாதியமும்

அன்புள்ள ஜெ,

நான் வேதாந்தம் உட்பட ஆன்மிக தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவனாக இருந்தேன். அதற்கான சிறு குழுக்களிலும் ஈடுபட்டிருந்தேன். ஆனால் காலம்செல்லச் செல்ல ஒன்று தெரிந்தது. இங்கே ஒவ்வொரு சித்தாந்தமும் அதற்கான சாதியப் பின்புலம் கொண்டது. இங்கே அத்வைதம் என்றால் ஐயர்கள். விசிஷ்டாத்வைதம் என்றால் ஐயங்கார்கள். சைவசித்தாந்தம் என்றால் பிள்ளைமார் அல்லது முதலியார்கள். அவ்வளவுதான்.

அந்தக் குழுக்களுக்குள் சென்றால் ஓரிரு நாட்களிலேயே சாதியப்பார்வையை பார்க்கமுடியும். சாதியப்பார்வை என்பது வாய் நாற்றம்போல என்று நீங்கள் எங்கேயோ எழுதியிருந்தீர்கள். வாய்நாற்றம் கொண்ட இன்னொருவருக்கு ஒன்றும் தெரியாது. வாய்நாற்றத்துடன் நம்முடன் பேசுபவருக்கும் தெரியாது. நமக்குத்தான் குமட்டிக்கொண்டே இருக்கும்.

அத்தனை தத்துவமும் தன் சாதிதான் உசத்தி என்று நிலைநாட்டுவதற்குத்தான் என்றால் அதைப்போன்ற அசட்டுத்தனம் வேறு என்ன இருக்க முடியும்? அத்தனை தத்துவமும் கடைசியில் சம்பிரதாயங்களையும் ஆசாரங்களையும் பேணுவதற்காகத்தான் என்றால், ராத்திரிபகலாக நினைப்பது எதை எங்கே எவருடன் சாப்பிடலாம் எவருடன் சாப்பிடக்கூடாது என்பது மட்டும்தான் என்றால் தத்துவமே அபத்தமாக ஆகிவிடுகிறது. என் தலைமுறையில் இந்த நாற்றம் இல்லாத ஒருசிலரைக்கூட நீங்கள் பார்க்கமுடியாது.

இங்கே பல நிறுவனங்கள் அத்வைதத்திற்காக ஆரம்பிக்கப்பட்டன. பல நிறுவனங்கள் சாதிகடந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் எல்லாமே கடைசியில் சாதியில்தான் போய் முடிந்தன. எனக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆகவே எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டேன். அத்வைதம், தத்துவம் என்றெல்லாம் ஒருவர் பேச ஆரம்பித்தாலே சரிதான் ஸ்மார்த்த அடிப்படைவாதம் என்று மனதுக்குள் நினைத்துக்கொள்வேன்.

ஆகவே உங்கள் காணொளிகளை யூடியூப் காட்டியபோது உங்களை ஐயர் என்றுதான் நினைத்தேன். ஆனால் பேச்சுமொழி வேறுமாதிரி இருக்கிறதே என்றும் தோன்றியது. அதன்பிறகுதான் உங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன். தமிழில் இதுவரை இவ்வாறு ஒரு நவீன இலக்கியச் சூழலில் இருந்து தத்துவம் கற்பிக்கப்படுவது நடைபெற்றதில்லை. அதிலும் எல்லா தத்துவமும் கற்பிக்கப்பட்டதில்லை. எல்லா தத்துவங்களும் கற்பிக்கப்படுவதென்பது ஒரு நல்ல விஷயம். சாதி சார்ந்த அடிப்படைவாதம் உருவாகாமல் அதுவே காத்துவிடும்.

இந்த வகையான எந்த அமைப்பை உருவாக்கினாலும் உடனே ஆர்வத்துடன் வந்து கலந்துகொள்ளும் ஒரு கும்பல் உண்டு. உள்ளே தீவிரமாக செயல்படுவார்கள். கொஞ்சநாளிலேயே உள்ளே ஒரு சாதிக்குழுவை உருவாக்கிக் கொள்வார்கள். பிராமணர்கள், வேளாளர்கள் இரண்டுபேருக்குமே இந்த மனச்சிக்கல் உண்டு. உண்மையில் அது ஒரு பெரிய சாபம். எங்கே சென்றாலும் எதைப் பயின்றாலும் சாதியை விடவே முடியாது என்றால் நிரந்தரமாக ஒரு வேதாளத்தைச் சுமக்கவேண்டியிருக்கிறது என்றுதான் அர்த்தம். பிராமணர்களுக்கு அந்தச் சாபம் உண்டு. அதுவே அவர்கள் அவ்வளவு கவனமும் ஆற்றலும் உடையவர்களாக இருந்தாலும் எதையும் பெரிதாகச் செய்யமுடியாமலாக்குகிறது. அந்தவகையான குழுசேரல்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து களைந்துகொண்டே இருந்தால் நல்லது.

இதெல்லாம் ஓர் ஆலோசனைதான். என் வயது காரணமாக இதைச் சொல்லலாம் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

எம்.ஆர்.மணிகண்டன்

முந்தைய கட்டுரைஇணையத் தலைமுறை
அடுத்த கட்டுரைதனிமை, ஏகாந்தம், கடிதம்