அன்புள்ள ஜெ
நலம்தானே?
பறவைபார்த்தல் பற்றிய காணொளி கண்டேன். அருமையான விளக்கம். இன்றைய குழந்தைகளின் மிகப்பெரிய சிக்கலே அவர்கள் எதையுமே சில நிமிடங்களுக்குமேல் கவனிப்பது கிடையாது என்பதுதான். இன்னும் சொல்லப்போனால் நொடிகள் மட்டுமே நீடிக்கும் காணொளிகளைத்தான் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்ககள். அதை அவர்கள் பார்க்காமல் தடுக்க எந்த வழியுமில்லை. சுற்றும் உள்ள குடும்பத்தில் எல்லாம் குழந்தைகள் அவற்றைப் பார்க்கும்போது நம் குழந்தைகளை தனியாகப்பிரித்து வளர்க்கவும் முடியாது.அவர்களை நம்மை நோக்கி ஈர்க்க வழியும் இல்லை. ஆனால் உண்மையான பிரச்சினை நாம் அவர்களின் மூளைக்கும் கற்பனைக்கும் போதிய இடம் அளிப்பதில்லை என்பதுதான் என்பது உங்கள் காணொளியின் சாரம். இப்படி இயற்கை நோக்கியும் அறிவியல் நோக்கியும் அவர்களை திருப்பி விடுவது மட்டும்தான் இன்று நாம் செய்யவேண்டியது. அதற்கு இதைப்போல பலவகையான வகுப்புகள் தேவை. இன்னும் பரவலாகவும் தீவிரமாகவும் அவை நிகழவேண்டும்.
அரவிந்தன்