அன்புள்ள ஜெ
ஆங்கில நாவல்போட்டி பற்றிய செய்தியை வாசித்தேன். பெண்களுக்கான நாவல்போட்டி என்பது ஓர் அருமையான கருத்து. இன்றைக்குப் பெண்கள் எழுதுகிறார்கள், ஆனால் கவனிக்கப்படுவதில்லை. தாங்களாகவே அமேசானில் வலையேற்றம் செய்கிறார்கள். சிலர் பணம் கொடுத்து நூலாக வெளியிடுகிறார்கள். ஒரு நல்ல பதிப்பகம் வெளியிடுவதென்பது மிகச்சிறந்த ஒரு வாய்ப்பு.
நான் நாவல் எழுதவேண்டும் என நினைப்பவள். என் வாழ்க்கை அனுபவங்கள் (நான் நர்ஸ் ஆக பணிபுரிகிறேன்) நிறைய உள்ளன. நாவலாக எழுதவேண்டும். ஆனால் ஆங்கிலம் என்பதுதான் கொஞ்சம் திகைப்பாக உள்ளது. முயற்சிக்கிறேன். நாவல் எழுதுவது என்னுடைய டிப்ரஷனை குறைக்கும் என்று நீங்கள் சொன்னது மிகப்பெரிய தூண்டுதலாக உள்ளது.
ஹரிப்பிரியா
அன்புள்ள ஹரிப்பிரியா,
மன அழுத்தம் என்பது சிதறிக்கிடக்கும் ஒரு நூலகம் போல மூளை திகழ்வதுதான். அதை சீராக அடுக்கி வைக்க ஒரு வழி எழுதுவது. புனைவு அதற்கு மிக அருமையான வடிவம். நீங்கள் உங்களையே எழுதலாம். ஆனால் உங்களை மறைத்துக்கொள்ளவும் முடியும்.
ஆங்கிலம் ஓரளவு தெரிந்தால்போதும், இன்றைய ஸ்பெல்செக் மென்பொருட்களைக் கொண்டு எழுதலாம். ஆனால் அவை நம் சொற்றொடர்களை மாற்றியமைக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி மாற்றியமைத்தால் ஏ.ஐ. டிடெக்டர் சாஃப்ட்வேர் அதை ஏ.ஐ.யால் எழுதப்பட்டது என்று சொல்லிவிடும். நாவல் உடனே நிராகரிக்கப்பட்டுவிடும்.
எழுதும்போது ‘எல்லா அனுபவங்களையும்’ எழுத முயலக்கூடாது. ஒரு கதையை, ஒரு மையக்கதாபாத்திரத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதை எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
ஜெ