அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வைணவ இலக்கிய அறிமுகம், வெள்ளி மலையில் எனது இரண்டாவது வகுப்பு. வெள்ளி மலையில் நிகழும் வகுப்புகள் பற்றிய ஒரு அறிமுகம் கிடைத்த பிறகு முதலில் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்த வகுப்புகள் இரண்டு, ஒன்று ஆலய கலை வகுப்பு இரண்டாவது வைணவ இலக்கியம்/பிரபந்த வகுப்பு.
சிறு பிராயம் முதலே வீட்டில், பெருமாள் கோவிலுக்கு அழைத்து சென்றதாலோ, மார்கழி முழுவதும் திருப்பாவையும் திருவெம்பாவையும், கோவிலுக்கு சென்று பாட வைத்ததாலோ, திருநெல்வேலி என்பதனால் நவ திருப்பதி கோவில்களுக்கு அழைத்து சென்றதாலோ பெருமாளின் மேலும் பெருமாள் கோவில்களின் மீதும் அதீத ஈடுபாடு. இதற்கிடையில் நானும் என் தோழி ப்ரீத்தியும் ஆண்டாள் பாசுரங்களை புரிந்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்று எப்போதும் பேசிக்கொள்வோம்
என்னதான் சிறு வயது முதலே பாசுரங்கள் பற்றிய அறிமுகம் இருந்தாலும் (மிக சிறிய அளவே) பாசுரங்கள் பற்றிய ஆழமான அறிதலோ புரிதலோ கிடையாது. சில வார்த்தைகள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். முழுமையான அர்த்தங்கள் தெரிந்து கொள்ள எப்போதுமே ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். எங்கு எவ்வாறு கற்று கொள்ள வேண்டும் என்று தெரியாது. ஒரு வயது வரை படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என்று இருந்து விட்டாலும் வீட்டில் மார்கழி ஆனால் 30 நாளும் திருப்பாவை ஒலித்து கொண்டே தான் இருக்கும்.
பிரபந்த வகுப்புகள் பற்றிய தகவல் தெரிந்த உடன் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். கடந்த வருட நவம்பர் மாத வகுப்பில் கலந்து கொள்ள முடிய வில்லை. இந்த வருட ஆரம்பம் முதலே எப்பொழுது அறிவிப்பு வந்தாலும் வகுப்புக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காத்திருந்த பொழுது வகுப்பு அறிவிப்பு வந்த முதல் நாளே பதிவு செய்து விட்டேன். வெள்ளி மலை வகுப்புகளுக்கு வருவது என்றாலே ஒரு ஆவல் நம் உள்ளம் முழுவதும் பரவி விடும். எப்பொழுதும் தாங்கள் சொல்வது போல நாம் ஒன்றை தேடி தேடி போய் கற்பதன் இன்பம். அவ்வாறே இந்த வகுப்புக்கும் மிகுந்த ஆவலுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு வெள்ளி காலை அன்று நித்ய வனம் வந்து சேர்ந்தோம் (அதிர்ஷ்ட வசமாக நானும் தோழியும் சேர்ந்தே வகுப்பிற்கு பதிவு செய்து இருந்தோம்).
முதல் வகுப்பு பக்தி இலக்கிய, வைணவ அறிமுகம். ஒவ்வொன்றாக ஆசிரியர் ராஜகோபாலன் விவரிக்க ஆரம்பிக்கும் பொழுதே நம்மை மெதுவாக நாம் அறியாமலே நம்மை அந்த உலகத்திற்கு அழைத்து சென்று விட்டார். வைணவ பக்தி முறை, வைணவத்தின் படி நிலைகள், வைணவ தத்துவம், பன்னிரு ஆழ்வார்கள், இறைவன் பக்தன் உறவு எவ்வாறு எல்லாம் வைணவ முறையில் வகுக்க பட்டுள்ளது என்ற விளக்கங்களுடன் வகுப்பு ஆரம்பித்தது. ஆசிரியர் ராஜகோபாலன் (ஜா ஜா) அவர்கள் குறைந்தது நூறு பாசுரங்களை எங்களுக்காக தொகுத்து முதலிலேயே அனுப்பி இருந்தார். முதல் இடைவேளைக்கு பிறகு பாசுரங்கள் ஆரம்ப மானது.
முதல் பாசுர தொகுப்பின் பெயர் என் சிறு குட்டன், இறைவனை (நாராயணனை) சிறு குழந்தையாக பாவித்து ஆழ்வார்கள் அளித்தருளிய பாசுரங்களின் தொகுப்பு. ஆசிரியர் ஜா ஜா வின் விளக்கங்கள் ஒரு சிறிய கிருஷ்ணரை வெள்ளி மலையில் நாங்கள் அனைவரும் எங்கள் மனக்கண்ணில் காண வழி வகுத்தது. பின்னர் ஒரு பத்து வயது மற்றும் பதின் பருவ கிருஷ்ணரின் லீலைகளை திகட்ட திகட்ட எழுதி தீர்த்த பாசுரங்களின் தொகுப்பு (நப்பின்னை காணில் சிரிக்கும்). அனைவர் கண்ணிலும் மாய கண்ணன் உருவெடுத்து ஆடிய தருணம்.
பின்னர் வகுப்பில் பாதி பேருக்கு மேல் எதிர்பார்த்து காத்திருந்த ஆண்டாளின் பாசுரங்கள். பத்து ஆண்டாள் பாசுரங்கள். ஒவ்வொரு பாடலுக்கு பிறகும் ஆண்டாள் மேல் காதல் கூடி கொண்டே சென்றது. இத்துணை நாள்கள் அறியாமல் இருந்த களஞ்சியம் மெதுவாக கண்களுக்கு புலப்பட்டது. ஆசிரியர் அவர்களின் பாசுரங்களின் பொருளும் தத்துவ விளக்கங்களும் “அகம் புக்கு அறியாமே” ஆண்டாளும், திருமங்கை ஆழ்வாரும் எங்களுக்குள் புகுந்து விட்டனர். இவ்வாறாக ஒரு குழந்தையாகவும், சிறுவனாகவும், காதலனாகவும், நாயகனாகவும் பாவித்தது வந்த பாசுரங்களில் களித்து இருந்தோம்.
இது மட்டும் இல்லை திவ்ய பிரபந்தகளில் என்பது போல, அடுத்த தொகுப்புகள் தத்துவார்த்தமான பாசுரங்களின் தொகுப்பு. ஆஹா, நமக்கு கூட கொஞ்சம் புரிகிறதே பாசுரங்கள் என்ற நினைப்பில் இருக்கும் பொழுது வந்தது திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்கள். தலை கொஞ்சம் சுத்தவே செய்தது. ஜா ஜா அவர்களின் விளக்கங்களுடன் சற்று புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்வியல் இச்சைகளில் புரள்வதும், அதிலிருந்து விடை பெறுவதற்கான மார்க்கங்களும், அனைத்தும் அவன் செயலே என்பதாக. அவன் தாள் பணிந்தால் அனைத்தும் நலமே.
இவ்வாறாக தத்துவ தொகுப்பில் அனைவரும் லயித்தது போதும் அடுத்ததாக களிறு பற்றிய விவரணைகளுடனான தொகுப்பு. அந்த தொகுப்பின் பெயர் “கூனல் பிறை வேண்டி“. கோவர்த்தன கிரியின் மேல் நின்ற மத களிறு கூனல் பிறையை தன் கொம்பாக்க முயற்சித்த பாடல்.
வானத்தில் உள்ளீர் வலியீர் உள்ளீரேல்
அறையோ வந்து வாங்குமின் என்பவன் போல்
ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை
இடவன் எழ வாங்கி எடுத்த மலை
கானக் களி–யானை தன் கொம்பு இழந்து
கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்துக்
கூனற் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே
அதற்கான விளக்கத்துடன் நிறுவைடைந்தது வகுப்பு. பாசுரங்கள் மட்டும் இல்லாமல் ஆழ்வார்களின் வரலாறும், ராமானுஜர் அவர்களின் வரலாறும் அவர்களின் சீடர்களின் வரலாறு பற்றியும் இடை இடையே சொல்லி கொடுத்து கொண்டே இருந்தார் ஜா ஜா அவர்கள். நாலாயிர பிரபந்தங்களின் நூறு முதல் நூற்றிஐம்பது பாசுரங்களுக்கான பொருளும் விளக்கங்களும் ஆசிரியர் அளித்தது திவ்ய பிரபந்தங்களை மேலும் வாசிப்பதற்கு ஒரு பெரிய திறப்பாக அமைந்தது.
சிறு வயது முதல் அரை குறையாக தெரிந்த பாசுரங்களின் விளக்கங்கள் தெரிந்து கொள்வதற்கும், நம் பழைய மரபுகளின் ஒன்றான வைணவத்தை பற்றி அறிவதற்குமான பெரிய திறப்பாக அமைந்தது இந்த வகுப்பு. அதற்கான மிக எளிமையான அதே நேரத்தில் மிக நேர்த்தியான தொகுப்புகளுடன் எங்களை பாசுரங்களின் உலகத்திற்கு அழைத்து சென்ற ஆசிரியர் ஜா ஜா அவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள். மூன்று நாள்களும் உணவளித்த சரஸ்வதி அம்மாவிற்கும், மணி அண்ணாவுக்கும் நன்றிகள்.
இவை அனைத்திற்கும் முழு முதற் காரணமான தங்களுக்கும் எங்கள் அனைவரின் மனமார்ந்த நன்றிகள். மேலும், சைவ வகுப்புகளுக்கும், மேலை, இந்திய தத்துவ வகுப்புகளுக்கும் கலந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கும்.
ஈஸ்வரி